சென்னையில் கடந்த 20 நாட்களில் 18 கொலைகள் நடந்துள்ளதை சுட்டிக்காட்டி இது தலைநகரா? கொலை நகரா? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னையில் கடந்த 20 நாட்களில் 18 கொலைகள் நடந்துள்ளதை சுட்டிக்காட்டி இது தலைநகரா? கொலை நகரா? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சி.பா.ஆதித்தனாரின் 41 ஆவது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழை பட்டி தொட்டியிலும் பரவ மகத்தான பணியை செய்தவர் சி.பா.ஆதித்தனார். அவர் மறைந்தாலும் அவர் பணி தொடர்ந்து வருகிறது என்று தெரிவித்தார். ராஜ்ய சபா உறுப்பினராக நீங்கள் தேர்ந்தெடுக்கபட வாய்ப்புள்ளதாக தகவல் வருகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுபடுவேன், திமுக போல சர்வாதிகார ஆட்சி, சர்வாதிகார தலைவர் அதிமுகவில் இல்லை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஊடகங்கள் மீது தொடுக்கப்பட்ட ஜனநாயக தாக்குதலே வழக்கு பதிவு என்ற அவர் கருத்து சுதந்திரம் குறித்து எதிர்கட்சியாக இருந்த போது வாய் கிழிய பேசினார். இப்போது எங்கே போனது கருத்து சுதந்திரம். ஜூனியர் விகடன் மீது மட்டுமல்ல இனி யார் மீது வேண்டுமானலும் வழக்கு தொடரப்படும். இது அனைவருக்குமான அச்சுறுத்தல். அரசை பற்றி பேசினாலே ஜெயில் தான் என்ற அவர் ஜனநாயக விரோத ஆட்சி நடந்து வருகிறது, காவல் துறையை ஏவல் துறையாக மாற்றி தமிழகத்தை தலை குனிய வைக்கும் செயல்.

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்த பின் பல மாநிலங்கள் குறைத்துள்ளது, வாக்குறுதி கொடுத்துவிட்டு ஏன் குறைக்கவில்லை என குற்றஞ்சாட்டிய அவர் ஆட்சிக்கோ, அமைச்சருக்கோ சுயபுத்தி இல்லையா? தோழமை கட்சி ஆட்சி நடக்கும் கேரள அரசு கூட குறைத்திருக்கிறது. வாய் கிழிய பேசும் நீங்கள் ஏன் குறைக்கவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் 20 நாளில் 18 கொலைகள் நடந்துள்ளது. இது தலைநகரா? கொலை நகரா? கொலை நகரமாகும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.