நாளை பிரதமரை மீண்டும் சந்திப்போம்...!!! - டெல்லியில் ஜெயக்குமார் பேட்டி
நீட் தேர்வு விவகாரம் குறித்து நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பிரதமரை மீண்டும் சந்தித்து விலக்கு அளிக்க வலியுறுத்துவோம் என நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் தகுதியை நீட் எனும் பொதுத்தேர்வு மூலம் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
இதற்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் மாநிலங்களின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு நீட் தேர்வை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தி முடித்தது.
இதைதொடர்ந்து வெளியான மதிப்பெண் முடிவுகளில், தமிழக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதைதொடர்ந்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என தமிழக அமைச்சர்கள் மூன்றுநாட்களுக்கு முன்பு டெல்லியில் பிரதமரை நேரில் வலியுறுத்தினர்.
ஆனால் நேற்று பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழிசை நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கே கிடையாது என்பது போல் பேட்டி அளித்தனர்.
இதனால் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் கே.பி.அன்பழகன், நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நீட் விவகாரம் குறித்து பிரதமரை சந்திக்க நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
இதையடுத்து இன்று காலை அமைச்சர்கள் பிரதமரை சந்தித்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் நீட் தேர்வு விவகாரம் குறித்து நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பிரதமரை மீண்டும் சந்தித்து விலக்கு அளிக்க வலியுறுத்துவோம் என தெரிவித்தார்.
மேலும், உள்துறை, நிதித்துறை அமைச்சர்களுடமும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும்படி கூறினோம் என்று தெரிவித்தார்.