jayakumar says 6 crore people should see the feeling

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் ஆட்சி நடைபெறும் எனவும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பதா இல்லையா என்பதை கட்சி தலைமை முடிவெடுக்கும் எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 

கடந்த 10 நாட்களாக பல்வேறு பிரச்சனை காரணமாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே தமிழத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசும் கால தாமதம் செய்து வருகிறது. 

இதில் ஒரு கை பார்த்து விட வேண்டும் என தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. 

இதனிடையே தமிழக சட்டப்பேரவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேலும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சாதரணமான ஒன்றாக பார்க்கக்கூடாது எனவும் 6 கோடி மக்களின் உணர்வாகவே பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் ஆட்சி நடைபெறும் எனவும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பதா இல்லையா என்பதை கட்சி தலைமை முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என அதிமுக அரசு அதிக அழுத்தம் கொடுத்து வருவதாக குறிப்பிட்டார்.