கொளத்தூர் தொகுதியா.? குளம் ஊரா.? முதலமைச்சருக்கு சிங்சாங் அடிக்கும் சேகர்பாபு- ஜெயக்குமார் விளாசல்
முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதி கொளத்தூர் இல்லை, குளம் ஊர் ஆக தான் உள்ளது என விமர்சித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக அரசின் பிடியில் இருந்து எப்பொழுது விடுதலை கிடைக்கும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை
வட கிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கன மழை காரணமாக வட சென்னை பகுதி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆடுதொட்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மதிய உணவு வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வாய்ச்சொல் வீரர்களாக, விளம்பர பிரியராக முதலமைச்சர் செயல்படுகிறார் என்று விமர்சனம் செய்த அவர், கன்னித்தீவாக கொளத்தூர் தொகுதி? உள்ளதாக தெரிவித்தார். கொளத்தூர் இல்லை, குளம் ஊர் ஆக தான் உள்ளது என்றும் குற்றம்சாட்டினார். திமுக அரசின் பிடியில் இருந்து எப்பொழுது விடுதலை கிடைக்கும் என மக்கள் எதிர்பார்ப்பதாகவும் கூறினார். கடந்த இரண்டு தினங்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக ஒன்றும் செய்யவில்லை என்றும் இரண்டு நாள் மழைக்கே திமுக கதறுவதாக தெரிவித்தார்.
ரேஷன் கடையில் சிறுதானியங்கள்..! இரண்டு மாவட்டங்களில் சோதனை முறையில் அறிமுகம்- சக்கரபாணி அறிவிப்பு
அதிமுக நிறைவேற்றிய திட்டம்
சென்னையில் தண்ணீர் ஓரளவு வற்றி இருப்பதற்கு காரணமே அதிமுக எடுத்த நடவடிக்கை தான் எனவும் மழையால் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு திமுக அரசு எந்த வித உரிய உதவிகளை செய்யவில்லை என குற்றம்சாட்டினார். மழைநீர் வடிகால் பணிகளை நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், 2ஆயிரம் கி.மீ மழை நீர் வடிகால்வாய் பணியை பாதிக்கும் மேல் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதாகவும், மீதி பணியை தான் திமுக நிறைவேற்றியுள்ளது என்றும் தெரிவித்தார். மழை நீர் வடிகால் திட்டங்களை திமுக நிறைவேற்றியது போல் அறநிலைய துறை அமைச்சராக இருக்கும் சேகர்பாபு முதலமைச்சருக்கு சிங் சாங் சிங்சாங் அடித்து திருப்தி படுத்த பேசி வருவதாக கூறினார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அதி நவீன கருவிகள் கொண்டு தூர்வாரப்பட்டதாகவும், மழைக்காலத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது என்றும் திமுக ஆட்சியில் இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பினார்.
அதிமுக வெற்றி உறுதி
கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே திமுக அரசை காப்பாற்றியுள்ளது என்றும் சிங்கார சென்னையை வாந்தி பேதி, டெங்கு, மர்ம காய்ச்சல் என்ற நிலைக்கு தான் 2006 -2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் சென்னையை வைத்திருந்ததாக விமர்சித்தார். விரைவில் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் கண்டிப்பாக வரும் ,அதில் அதிமுக வெற்றி பெறும் எனவும் ஜெயக்குமார் உறுதிபட தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்