ஜெயலலிதா வசித்த வீட்டை நினைவில்லமாக மாற்ற ஏற்படும் சிக்கல்களை களைய வேண்டியது அரசின் கடமை என்று தமிழக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆனால், ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமின் வாரிசுகள் தீபா, தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், ஜெயலலிதாவின் வாரிசுகளாக இருவரையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


இதற்கிடையே ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடமாக்க அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. தங்களை வாரிசுகளாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், ஜெயலலிதாவின் வேதா இல்ல வீட்டின் சாவியைக் கேட்டு தீபாவும் தீபக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்ற நிலத்தை கையகப்படுத்தி இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது.


மொத்தம் 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பளவு கொண்ட ஜெயலலிதாவின் வேதா நிலையத்துக்கு இழப்பீட்டு தொகையாக ரூ. 67.9 கோடியை நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்தது. மேலும் ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரித் தொகையையும் தமிழக அரசே செலுத்தியது. இதனையடுத்து ஜெயலலிதாவின் இல்லம் அரசுடைமையானதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே ஜெயலலிதா செலுத்தாத வருமான வரி பாக்கியை தமிழக அரசே செலுத்தியது விவாதப் பொருளாகியுள்ளது. மேலும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக தீபா அறிவித்துள்ளார்.
 இந்நிலையில் இது குறித்து தமிழக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு மாபெரும் தலைவர். அவர் வாழ்ந்த வீடு நினைவில்லமாக மாற்றப்படுவது போற்றத்தக்கது. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜெயலலிதா வசித்த வீட்டை நினைவில்லமாக மாற்ற ஏற்படும் சிக்கல்களை களைய வேண்டியது அரசின் கடமை” என ஜெயக்குமார் தெரிவித்தார்.