ஜெய் ஹோ மோடி.. 2024 தேர்தலும் தெளிவாகிவிட்டது.. பாஜக வெற்றியால் துள்ளிக் குதிக்கும் மாஜி அதிமுக எம்.பி.!
பொதுத் தேர்தல் நடந்த கோவா, மணிப்பூர், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை பெற்றதற்கும், மக்களின் மனதை வென்றதற்கும் வாழ்த்துகள்.
ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் நான்கில் பாஜக வெற்றி பெற்றதற்கு அதிமுக முன்னாள் எம்.பி. தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. பஞ்சாப்பில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியிலிருந்து காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது. பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் மக்களிடம் உள்ள செல்வாக்கு குறையவில்லை என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. பாஜக பெற்ற வெற்றிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், “பொதுத் தேர்தல் நடந்த கோவா, மணிப்பூர், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை பெற்றதற்கும், மக்களின் மனதை வென்றதற்கும் வாழ்த்துகள். உங்களது தலைமையில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் மூலமே இந்த வெற்றி வந்துள்ளது” என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதேபோல அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய நான்கு மாநில தேர்தல்களில் பாஜகவின் மகத்தான வெற்றிக்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட மாநிலங்களில் பதவியேற்கும் புதிய முதல்வர்களுக்கு எனது வாழ்த்துகள். இதற்கிடையே அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இதயபூர்வமான வாழ்த்துகள். ஜெய் ஹோ மோடி. மோடியால் சாத்தியாகி இருக்கிறது. 2024 தேர்தலும் தெளிவாகிவிட்டது. எல்லா பக்கங்களிலும் நரேந்திரமோடி” என்று மைத்ரேயன் பதிவிட்டுள்ளார்.