Jai Bhim: சூர்யா அக்னி சட்டியை நீக்கியதே தவறு.. பாமகவை போட்டு சாத்தும் சவுக்கு சங்கர்.
அப்படி என்றால் அவர்கள் வீட்டில் உள்ள டிவிகளை உடைத்திருப்பார்களா? கைப்பேசிகளை உடைத்திருப்பார்களா? அதேபோல இந்த படத்தில் லட்சுமி படம் வைக்கப்பட்டதால் இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டுவிட்டது என எச். ராஜா கூறுகிறார்.
பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் வட இந்தியாவில் என்ன செய்கிறதோ அதை தான் வட தமிழகத்தில் பாமக செய்கிறது என்றும், பாஜக இந்து கடவுள்களை காட்டக் கூடாது எனக் கூறுவதைப்போல, இவர்கள் மஞ்சள் நிறத்தையும், அக்னி சட்டியையும் காட்டக்கூடாது என்கின்றார்கள். இந்த இரண்டு கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார். பாமகவினர் கேட்கிறார்கள் என்பதற்காக ஜெய் பீம் திரைப்படத்திலிருந்து அக்கினிச் சட்டியை நீக்கியது தவறு என்றும், அதை நீக்கியிருக்கவே கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம், இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர் ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின் அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அத்துடன் 5 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் பாமக வழக்கு தொடுத்துள்ளது. நாளுக்கு நாள் சூர்யா-- பாமக மோதல் அதிகரித்து வரும் நிலையில் இதில் அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் வட இந்தியாவில் பாஜக ஆர்எஸ்எஸ் என்ன அரசியல் செய்கிறதோ அதே அரசியலை பாமக வட தமிழகத்தில் செய்துகொண்டிருக்கிறது என அரசியல் விமர்சகம் சவுக்கு சங்கர் விமர்சித்துள்ளார். மேலும் பேசியுள்ள அவர்,
ராஜராஜன் பிறந்தநாள் விழாவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு ட்வீட் வெளியிட்டிருந்தார். அதில் ராஜராஜ சோழன் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்ற பொருள்படும் வகையில் பெரும்பள்ளி ராஜராஜன் என பதிவிட்டிருந்தார். நான் கேட்கிறேன் அப்படிப்பட்ட மன்னர் பரம்பரையை அக்னிசட்டி காண்பித்து இழிவு செய்துவிடமுடியுமா.? குறிப்பாக வட இந்தியாவில் பிஜேபியும் ஆர்எஸ்எஸ்சும் என்ன செய்கிறதோ, அதே அரசியலைதான் வட தமிழகத்தில் பாமக செய்து கொண்டிருக்கிறது. அங்கு அவர்கள் இந்து கடவுள்களை காட்டக் கூடாது, இந்து சாமியார்களை பற்றி எழுதக்கூடாது என்று சொல்கிறார்கள், இவர்களும் இங்கே மஞ்சள் நிறத்தை காட்டக்கூடாது, அக்னி சட்டியை காட்டக்கூடாது என்கிறார்கள். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. ஜெய்பீம் திரைப்பட குழுவிடம் ஒன்றைக் சொல்லிக் கொள்கிறேன் பாமகவினர் சொல்கிறார்கள் என்பதற்காக முதலில் அக்னி சட்டையை நீக்கியதே தவறு என்று நான் சொல்வேன். அப்படி நீக்காவிட்டால் அவர்களால் என்ன செய்திருக்க முடியும். இந்த திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகவில்லை, இது ஓடிடி தளத்தில் வெளியாகிஉள்ளது.
அப்படி என்றால் அவர்கள் வீட்டில் உள்ள டிவிகளை உடைத்திருப்பார்களா? கைப்பேசிகளை உடைத்திருப்பார்களா? அதேபோல இந்த படத்தில் லட்சுமி படம் வைக்கப்பட்டதால் இந்து மதம் இழிவுபடுத்தப்பட்டுவிட்டது என எச். ராஜா கூறுகிறார். உயர்நீதிமன்றத்தில் இழிவாக பேசிய அவர் லட்சுமி படம் வைக்கப்பட்டதால் இந்துமதம் இழிவுபடுத்தப்பட்டுவிட்டது என்பது முட்டாள்தனமானது. அன்று அரசியல் காரணத்திற்காகவோ, என்ன காரணத்திற்காகவோ விஸ்வரூபம் படத்தை வெளியிடக்கூடாது என 27க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டம் நடத்தி தடுத்தனர். இப்போதும் அதே போன்ற ஒரு பிரச்சினையைதான் நடிகர் சூர்யா எதிர்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் கமல், விஜய் போன்றவர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் வெளிப்படையாக சந்தானம் சாதிவெறியை காட்டியிருக்கிறார், இது அவரது திரை எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
இனிமேல் அவருக்கு பட வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான், இது போன்ற சாதி வெறி நபரை படத்தில் வைத்தால் அது தங்களுக்கு தேவையில்லாத பாதிப்பை ஏற்படுத்தும் என பலர் எண்ணக்கூடும். அதேபோல், தற்போது சூர்யாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதை பயன்படுத்தி அவர் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாம், மற்ற பிரபல நடிகர்களை எல்லாம் ஒப்பிடும்போது மிகச் சிறந்த உன்னத நோக்கத்தை வைத்துள்ள சூர்யா போன்றவர்கள் அரசியலுக்கு வருவது வரவேற்கதக்க ஒன்று என அவர் கூறியுள்ளார்.