காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கபட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் பட்டும் படாமல் நடவடிக்கை எடுத்த மாவட்ட எஸ்.பி முத்தரசிக்கு ஜாக்பாட் அடிக்கிறது.

அவரை நல்ல பதவியில் அமர்த்துங்கள் என்று அதிமுக மேலிடம் சொன்னதாக கட்சியினரிடையே பலமான பேச்சு அடிபடுகிறது

காஞ்சிபுரம் மாவட்டம் தமிழக மாவட்டங்களிலேயே குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும் மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் எஸ்.பி ஆக விஜயகுமார் இருந்த வரை ரவுடிகள் ராஜ்ஜியம் ஒடுக்கபட்டிருந்தது.

அதன்பின்னர் அவர் மாற்றப்பட்டு எஸ்.பியாக முத்தரசி நியமிக்கபட்டார். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் குற்ற சம்பவங்கள் நடைபெற்றது. இதில் அதிக அளவில் அரசியல் கொலைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட எஸ்.பியாக பதவி வகிக்கும் முத்தரசி சட்டம் ஒழுங்கை சரியாக கையாளவில்லை என்ற விமர்சனம் இருந்து வந்தது.

ஆனால் அவருக்கு இருந்த செல்வாக்கு காரணமாக அவர் தொடர்ச்சியாக பதவியில் நீடித்து வந்தார்.

இந்நிலையில், அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையில் சசிகலா தரப்பு எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கவைக்கபட அந்த மாவட்ட எஸ்.பி முத்தரசி அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

பத்திரிக்கையாளர்கள் பொதுமக்கள் தாக்கப்பட்டபோது அதுகுறித்து நடவைக்கை எடுக்காததால் பிரச்சனை கவர்னர் வரை சென்றது. ஆனாலும் எஸ்.பி முத்தரசி தனது நிலையை மாற்றிகொள்ளாமல் பணியை செய்ததால் சசிகலா தரப்பினருக்கு மிகுந்த சந்தோசமாம்.

இதனால் புதிய அரசு பதவி ஏற்கும் நிலையில், எஸ்.பி முத்தரசிக்கு நல்ல பதவி கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அநேகமாக உளவு பிரிவு எஸ்.பி.யாக அல்லது சென்னையில் வலுவான இடத்தில் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்று காவல்துறை வட்டாரத்திலேயே பேச்சு அடிபடுகிறது.