IT planning to raid dinakaran home
வரலாறு காணாத பண புழக்கத்தையும், விஜயபாஸ்கரிடம் நடத்தப்பட்ட சோதனையையும் காரணம் காட்டி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம்.
இதையடுத்து, தினகரன், முதல்வர் உள்ளிட்ட ஆறு அமைச்சர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்த வருமான வரி துறையினர் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடப்பது குறித்த வீடியோ ஆதாரங்கள் அனைத்தையும், எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தன.

அதை தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர், அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் நேற்று முன்தினம், வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தினர்.
சோதனையில் கிடைத்த பல முக்கிய ஆவணங்களின் அடிப்படையில், 89 கோடி ரூபாய் அளவுக்கு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதற்கான ஆதாரங்கள் சிக்கின.
மேலும், அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனுவாசன், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களின் பங்களிப்பும் அந்த ஆவணங்களில் இடம் பெற்றிருந்தன.

மேலும், மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் பெயரும் அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து, தினகரன், முதல்வர், அமைச்சர்கள், வைத்திலிங்கம் ஆகிய அனைவரது நடவடிக்கைகள் அனைத்தையும், வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே ரகசியமாக கண்காணிக்க தொடங்கி விட்டனர்.
இந்நிலையில், தினகரன், முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் எந்த நேரமும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
