நான்காவது நாளாக  உண்ணாநிலை அறப் போராட்டத்தை தொடரும் TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கோரிக்கை நியாயமானது. இதனை முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்,  

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் மீட்பது அரசின் தார்மீக கடமை என்றும் ஆனால் 150 பேர் 200 பேரை மீட்டுவிட்டு பிரதமர் அதனை சாதனையாக சொல்வது வேதனை அளிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் TET தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் ஆதரவு தெரிவித்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசாணை 149ஐ ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் உண்ணாநிலை அறப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நான்காவது நாளாக உண்ணாநிலை அறப் போராட்டத்தை தொடரும் TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கோரிக்கை நியாயமானது. இதனை முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம், முதல்வரின் தனி செயலாளர் உதய சந்திரன் அவர்களையும் சந்தித்து இவர்களுக்கான பிரச்சினை தீர்வுக்கு வழி காட்டுதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறேன். 

தகுதித் தேர்வு மட்டுமே போதுமானவை, இரண்டு தேர்வுகள் தேவையில்லை என்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 8 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இவர்களது கோரிக்கை நியாயமானது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் துணை மேயர் நகராட்சித் தலைவர் பேரூராட்சி தலைவர் ஆகிய பொறுப்புகளை வழங்கிய முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், சனாதன சக்திகளை வீழ்த்தும் களத்தில் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி களமாடும்.

உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் தகவல்கள் வந்தது, அயலக வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்று பேசினோம், உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் தமிழர்களின் மொத்த பயண செலவை தமிழக அரசு ஏற்கும் என முதலில் தமிழக முதல்வர் அறிவித்தார். அந்த யுத்தம் தொடரக்கூடாது உயிர் பலியாக கூடாது அங்கே இருப்பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வெறும் 150 பேர் 200 பேர் மீட்கப்பட்டு விட்டனர் என்று அதையே சாதனையாக பிரதமர் கூறுகிறார். அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் பிரதமரின் செயல் வேதனை அளிக்கிறது. 

மாணவர்கள் மட்டுமின்றி இந்தியர்கள் அனைவருமே நீக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்தத்தில் போர் வேண்டாம், அணு ஆயுதப் போர், உலகப்போர் இல்லாமல் மனித நேயம் காக்கப்பட வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதுமே மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது ஒன்றிய அரசின் போக்காக இருக்கிறது. வடகிழக்கு பருவமழை சேதத்திற்கு ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ள தொகை மிகமிக சொற்பமானது. முதல்வர் இது குறித்து மீண்டும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.