யார் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதெல்லாம் முக்கியம் அல்ல. மக்களை கவரும் வகையில், எண்ணத்தை பிரதிபலிக்கிற போராட்டத்தை, அரசுக்கு வலுவான கருத்தை எடுத்துரைக்கும் போராட்டமாக இருக்க வேண்டும்

அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகிவிட்டது. அவர்கள் விலகிய பிறகு பேசும் கருத்துக்களுக்கு எல்லாம் எப்படி பதில் சொல்ல முடியும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதிமுக கூட்டணியில் தங்களை காலை வாரிவிட்டதாக ஒவ்வொரு ஊரிலும் புகார் கூறி வருகிறார். சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக போட்டியிட்ட 23 தொகுதிகளில் 15 தொகுதிகளில் வென்றிருக்க முடியும். ஆனால், பாமக வெற்றி பெறாமல் இருக்க எதிர்க்கட்சியினருடன் கூட்டணி சேர்ந்து வீழ்த்தினார்கள் என்று அதிமுக கூட்டணியை ராமதாஸ் விமர்சனம் செய்திருந்தார். டாக்டர் ராமதாஸின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக தரப்பில் எந்தப் பதிலும் வரவில்லை. இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் புகார் தொடர்பாக செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு கூறுகையில், “அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகிவிட்டது. அவர்கள் விலகிய பிறகு பேசும் கருத்துக்களுக்கு எல்லாம் எப்படி பதில் சொல்ல முடியும்? பாமகவினர் பேசுவதற்கு அதிமுக தலைவர்கள் பதில் சொல்வார்கள்.” என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார். மேலும் செல்லூர் ராஜூ கூறுகையில், “அதிமுக ஓர் அருமையான அமைப்பு. அதிமுகவை 31 ஆண்டுகள் ஆட்சியில் அமர வைத்து அழகு பார்த்தவர்கள் தமிழக மக்கள். அதிமுக சாதனை மேல் சாதனை செய்து கொண்டு வருகிறது. அதிமுகவினர் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கொண்டவர்கள்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது. திமுக அரசு மீது தமிழக மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். பாஜக தான் எதிர்க்கட்சியாக செயல்படுகிறதா என கேட்கிறீர்கள். பாஜக வளரும் கட்சி என்பதால் அவர்களின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கும். யார் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதெல்லாம் முக்கியம் அல்ல. மக்களை கவரும் வகையில், எண்ணத்தை பிரதிபலிக்கிற போராட்டத்தை, அரசுக்கு வலுவான கருத்தை எடுத்துரைக்கும் போராட்டமாக இருக்க வேண்டும்” என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.