தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள்..! அரசுக்கு எதிராக அதிமுக..! அனல் பறக்கும் சட்டப்பேரவை கூட்டம்
தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கவுள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக அதிமுகவும் கூட்டத்தை புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டம்
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரையுடன் கூட்டமானது தொடங்கும். அந்த வகையில் ஆளுநர் ஆர் என் ரவி இன்று தலைமைசெயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் உரையாற்ற உள்ளார். தலைமைசெயலகம் வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்பார். இதனையடுத்து சிவப்பு கம்பள வரவேற்ப்புடன் சட்டப்பேரவை அரங்கத்திற்கு ஆளுநர் அழைத்து செல்லப்படவுள்ளார். இதனையடுத்து தமிழக அரசு தயாரித்து கொடுத்துள்ள உரையை ஆளுநர் ஆங்கிலத்தில் வாசிப்பார். இதனை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசிப்பார்.
ஆளுநர் உரை புறக்கணிப்பா.?
இந்தநிலையில் ஆளுநர் ஆர் என் ரவியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் இன்றைய சட்டப்பேரவை கூட்டதை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவதாக திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், ஆளுநர் உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதிமுகவை பொறுத்தவரை தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து கூட்டத்தை புறக்கணிக்க இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக கோவை குண்டு வெடிப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, உள்ளிட்டவைகள் முக்கிய பிரச்சனைகளாக இருக்கும் என தெரியவருகிறது. எனவே இன்றைய கூட்டத்தில் திமுக மற்றும் பாஜக மட்டுமே கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்