ஆளுநர் ஆர்.என்.ரவி தமது டெல்லி பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, தமிழக சட்டப்பேரவையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தீர்மானம் அனுப்பப்பட்டு சுமார் 142 நாட்கள் கடந்த நிலையில், அண்மையில், தமிழக அரசு அனுப்பிய நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்தார். 

இந்த விவகாரம் தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது. இதற்கிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை காலை 9:55 மணிக்கு தலைநகர் டெல்லிக்கு புறப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் பயணத்தின் போது, நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை, ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க திட்டமிட்டப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஆளுநர் ரவி டெல்லி செல்லக் கூடும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் தமிழக அரசியல் காலம் சூடுபிடித்து இருக்கிறது.