முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 2ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி செல்லும் முதல்வர் :
ஜூலை மாதம் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப் படத்தை திறந்து வைக்குமாறு குடியரசுத் தலைவரை சந்தித்து அழைப்பு விடுத்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகிற ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி டெல்லி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் சேர்த்து 7 எம்பிக்களை பெற்ற இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநில கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்க கடந்த 2006ம் ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது.

புதிய அலுவலகம் :
இந்தநிலையில், டெல்லியில் உள்ள தீன் தயால் உபாத்தியா மார்க் பகுதியில் திமுக கட்சி அலுவலகம் கட்ட கடந்த 2013ம் தேதி இடம் ஒதுக்கப்பட்டது. அதன்படி, ஒதுக்கப்பட்ட இடத்தில் அலுவலக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று அங்கு நடைபெற்று வரும் கட்சி அலுவலக கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து திமுக அலுவலக கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று முழுமையாக முடிந்துள்ளது. இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 2ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவர் டெல்லி திமுக தலைமை அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தலைவர்கள் சந்திப்பு :

இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
