இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஓட்டுபோட மாட்டாங்க. அடித்து சொல்லும் அர்ஜூன் சம்பத்.
அதே நேரத்தில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் நாடாளுமன்றத்திற்கோ சட்டமன்றத்திற்கு செல்வதை நாங்கள் விரும்பவில்லை என அவர் பகிரங்கமாக பேசியுள்ளார். அவர் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பாஜக கூட்டணியில் இஸ்லாமிய-கிறிஸ்தவ வேட்பாளர்களை களம் இறக்கும் தொகுதிகளில் இந்து மக்கள் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்ளும் என்று அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். சிறுபான்மை இன வேட்பாளர்களை களம் இறங்குவதை அதிமுக பாஜக கூட்டணி தவிர்க்க வேண்டும் என்றும் அவர் நெல்லையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பான வியூகங்களிலும் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. வழக்கம்போல இந்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக திமுகவுக்கு இடையே நேரடி போட்டி என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து திமுகவை எதிர்கொள்ள உள்ளன.
இதற்கிடையில் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இந்து மக்கள் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம்- கிறிஸ்தவ இஸ்லாமிய சிறுபான்மை இன மக்களை தாக்கியும், விமர்சித்தும், இழிவுபடுத்தியும் பேசி வருகிறது. குறிப்பாக அக் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், கிறிஸ்தவ இஸ்லாமிய சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தமிழக அரசு பொங்கல் பரிசை இந்துக்களுக்கு மட்டும் வழங்க வேண்டும், அதை இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு வழங்கக்கூடாது என வலியுறுத்தினார். அவரின் இப்பேச்சு கடுமையாக சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் இச் சர்ச்சை மறைவதற்குள் மீண்டும் சிறுபான்மையின மக்களை குறிவைத்து அவர் பேசியுள்ளார்.
அதாவது, நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக பாஜக கூட்டணியில் கிறிஸ்துவ இஸ்லாமிய வேட்பாளர்களை களம் இறக்குவதை தவிர்க்க வேண்டுமெனவும் அப்படி அவர்கள் களமிறக்கப்பட்டால் அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு வழங்காது, அதரவை வாபஸ் பெறும் எனவும், அதை கடுமையாக எதிர்க்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். அதிமுகாவாக இருந்தாலும் சரி, பிஜேபியாக இருந்தாலும் சரி, அதை நாங்கள் எதிர்ப்போம். இரண்டு கட்சிகளுக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, இஸ்லாமிய கிறிஸ்தவர்கள் எந்த சூழலிலும் உங்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள். எனவே அவர்களுக்கு சீட்டு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் முஸ்லிம், கிறிஸ்தவர்கள் நாடாளுமன்றத்திற்கோ சட்டமன்றத்திற்கு செல்வதை நாங்கள் விரும்பவில்லை என அவர் பகிரங்கமாக பேசியுள்ளார். அவர் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக அர்ஜுன் சம்பத் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இஸ்லாமியருக்கு எதிராக அவர் பேசி வருவது கடும் கண்டனத்தையும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும் அர்ஜுன் சம்பத் போன்றவர்களை சமூகத்தில் இருந்தும், அரசியல் இருந்தோம் ஒரங்கட்ட வேண்டும் என நல்லினக்க வாதிகள் வலியுறுத்துகின்றனர்.