இரட்டை இலையை முடக்கியவருக்கு தலைமை பதவியா..? ஓ.பி.எஸுக்கு எதிராக கொந்தளிக்கும் அதிமுக தொண்டர்கள்..!
பாஜக ஆசைப்பட்டால், ஓ.பி.எஸை தங்களது கட்சியில் இணைத்து தலைமை பொறுப்பை கொடுக்கட்டும்’’ என கொந்தளிக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்.
மூன்றரை ஆண்டுகளாகப் பெட்டிப் பாம்பாக பதுங்கியிருந்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது படமெடுத்து ஆடுகிறார். அவர் முகத்தில் பவ்யம் தெளிந்து, ரெளத்திரம் தெறிக்கிறது. துரோகம் ஒரு போதும் வாழாது. விஸ்வாசம் ஒரு போதும் வீழாது. பொய்கள் பல்லக்கில் வந்தாலும் ஒளிந்து மறைந்து வரும்.
உண்மை நிமிர்ந்து வான் உயர ஊர்வலமாய் வரும் என்றெல்லாம் தத்துவ முத்துக்களை சமூகவலைதளங்களில் தூவி வருகிறார்கள் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள். விரைவில் ஓ.பி.எஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம்... தர்மயுத்தம் நடத்தலாம் என்கிற தகவல்கள் கசிகின்றன.
அதிமுக தலைமைக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி, ஜெயலலிதா அமைத்து தந்த அதிமுக ஆட்சி அசந்திருந்தால் ஓ.பி.எஸால் கவிழ்க்கப்பட்டிருக்கும். பதவி கிடைக்கவில்லை என்பதற்காக எம்.எல்.ஏக்களை பிரித்து அதிமுகவுக்கு எதிராக பதம் பார்க்கத்துடித்தவர் தானே இந்த ஓ.பி.எஸ். மீண்டும் அதிமுக தலைமை பதவிக்கு ஆசைப்படுவதற்கு அவருக்கு எந்த வித தார்மீக உரிமையும் இல்லை என்கிறார் அவர் சார்ந்த தென் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக புள்ளி ஒருவர்.
கட்சி எனக்கு ஆட்சி உனக்கு என தேர்தல் சமயத்தில் வந்து கோஷம் போடுகிறார் ஓ.பி.எஸ். அவர் தர்மயுத்தம் நடத்தி வெளியேறிய பிறகு அவருடன் வெஇயேறிய எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை எவ்வளவு? அதிமுக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வந்தவர்தானே அவர்? கொஞ்சம் அசத்து இருந்தாலும் அம்மா அமைத்த ஆட்சிக்கு ஆபத்து வந்து இருக்கும். இரட்டை இலையை முடக்கிய ஓ.பி.எஸுக்கு அபோது துணை முதல்வர் பதவி கொடுத்ததே தேவையற்றதுதான். அன்றைய நிலவரம் கருதியும், சீனியர் என்பதை உணர்ந்தும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. இப்போது ஆட்சி, கட்சியின் தலைமை பொறுப்பை அவர் கேட்கும் உரிமையை அரசை எதிர்த்து வாக்களித்த போதே ஓ.பி.எஸ் இழந்து விட்டார். இரட்டை இலையை முடக்கிய ஓ.பன்னீர்செல்வம் இப்போது நல்லவராகி விட்டாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்பு செய்த அதே தவறை தான் ஓ.பி.எஸ் தேர்தல் நெருங்கும் நிலையில் செய்ய ஆரம்பித்து இருக்கிறார். அவருக்கு பாஜக ஆசி இருந்தால் மட்டும் போதுமா? அதனை மனதில் வைத்துக் கொண்டு தான் அதிமுக தலைமைக்கு எதிராக காய் நகர்த்துகிறாரா? இது அதிமுக. பாஜக விரும்புவதற்காக அவர்கள் சொல்லும் தலைமையை அவர்களுக்கு கைகட்டி நிற்பவர்களுக்காக விட்டுக் கொடுக்க முடியாது. அப்படி பாஜக ஆசைப்பட்டால், ஓ.பி.எஸை தங்களது கட்சியில் இணைத்து தலைமை பொறுப்பை கொடுக்கட்டும்’’ என கொந்தளிக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள்.