வரலாற்றை மாற்றுகிறதா தமிழக காங்கிரஸ்..? பாஜக அண்ணாமலையை பார்த்து அடிபோடும் ராகுல் காந்தி..?
அடுத்த தேர்தலுக்கு முன்பாக காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என்றால் நாமும் ஒரு இளம் தலைமுறையை களமிறக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருக்கிறது காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை மாநில தலைவராக இரண்டரை ஆண்டுகள் அல்லது மூன்றாண்டுகள் மட்டுமே தலைவர் பதவி வகிக்க முடியும். அந்த வகையில், தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றார். ஆகையால் அவரை மாற்றி விட்டு புதிய தலைவரை நியமிக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த் முறை 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு தர காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக டெல்லியில் முகாமிட்டு பலரும் காய் நகர்த்தி வருகின்றனர். நாடாளுமன்ற கூட்டம் முடிந்ததும் இந்த மாத இறுதிக்குள் புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
செயல் தலைவர்களாக விஷ்ணுபிரசாத், ஜெயக்குமார், மோகன்குமார மங்கலம், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் இருக்கிறார்கள். மறைந்த வசந்தகுமார் எம்.பி.யும் செயல் தலைவராக இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு புதிய செயல்தலைவர் நியமிக்கப்படவில்லை. ஆனால் செல்லக்குமார் எம்.பி., மாணிக்கம் தாகூர் எம்.பி., கார்த்திக் சிதம்பரம், எம்.பி., ஜோதிமணி எம்.பி. ஆகிய 4 பேரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜகவில் புதிதாக வந்து சேர்ந்து இருந்தாலும் தலைவர் பதவிக்கு வயதில் குறைந்தவருக்கு வாய்ப்பு வழங்கியிருப்பதையும், காங்கிரஸ் மேலிடம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. எனவே அடுத்த தேர்தலுக்கு முன்பாக காங்கிரசை வலுப்படுத்த வேண்டும் என்றால் நாமும் ஒரு இளம் தலைமுறையை களமிறக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருக்கிறது காங்கிரஸ்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் 50 வயதுக்கு குறைவானவர்கள் என்று எடுத்துக்கொண்டால், கார்த்தி சிதம்பரம், விஷ்ணுபிரசாத், மாணிக்தாகூர், ஜோதிமணி ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி இடத்தை பிடிப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியில் பழம் தின்று கொட்டை போட்ட சீனியர்கள் இவ்வாறு இளம் தலைமுறைக்கு வழி விடுவார்களா என்பது பெரிய கேள்விக்குறி. சீனியர் ஒருவருக்கு தலைவர் பதவி கொடுத்தாலே இன்னொரு கோஷ்டி அதை ஏற்பது கிடையாது. அப்படி இருக்கும்போது கார்த்தி சிதம்பரம் அல்லது ஜோதிமணி போன்ற இளம் தலைவருக்கு தலைவர் பதவியை கொடுப்பது என்பது காங்கிரஸ் வரலாற்றில் தமிழ்நாடு காங்கிரஸ் வரலாற்றில் நினைத்துப் பார்க்க முடியாத பெரிய விஷயம்.