Is it fair to say that TTV is going to dissolve the regime? - Vasanthi Murugesan MP

டி.டி.வி. தினகரன், திமுகவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ஆட்சியைக் கலைத்து விடுவேன் என்று மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்று எடப்பாடி அணிக்கு தாவிய எம்.பி. வசந்தி முருகேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்குப் பிறகு, கடும் அதிருப்திக்கு ஆளானது டிடிவி தினகரன் தரப்பு. 

இதனிடையே டிடிவிக்கு ஆதரவு அளித்து வந்த ஜக்கையன் எம்எல்ஏ, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி சென்றார். இந்த நிலையில், டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த தென்காசி தொகுதி அதிமுக மக்களவை உறுப்பினர் வசந்தி முருகேசன், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று ஆதரவு அளித்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. வசந்தி முருகேசன், டிடிவி தினகரன் திமுகவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இந்த ஆட்சியை அழித்து விடுவேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி தொடரவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.

ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட எம்எல்ஏக்களை தனியாக சிறைபிடித்து வைத்திருப்பது என்ன நியாயம்? மக்களுக்காக பணியாற்ற வேண்டுவதுதானே நியாயம் என்றும் அவர் கூறினார்.
அணி மாறுவது குறித்து எங்களுக்கு எந்தவித மிரட்டலும் வரவில்லை. ஆட்சியைக் கலைக்கக்கூடாது என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்துள்ளேன் என்றார்.

டிடிவி தினகரன் திமுகவுடன் கூட்டு சேர்த்து கொண்டு ஆட்சியை கலைத்துவிடுவேஎன் என்று மிரட்டுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவேன் என்று எம்.பி. வசந்தி முருகேசன் கூறினார்.