2020-ம் இனி இப்படித்தானா..? ஆரம்பிக்கும் முன்பே ஹெச்.ராஜாவின் அபசகுன பேச்சு..!
2019ல் நடந்த குற்றத்திற்கு 2019 திலேயே நடவடிக்கை தேவை. இல்லையெனில் 2020 போராட்ட ஆண்டாகத் துவங்கும்
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகுவிமர்சியாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தியாவில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாள்தோறும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை முன்னெடுத்து மக்களின் நிம்மதியை நிர்மூலமாக்கி வருகின்றன.
இந்நிலையில் இந்திய குடியுரிமை சட்டத்திருந்த மசோதாவை எதிர்த்து நடந்த கூட்டத்தில் நெல்லை கண்ணன் மோடியையும், அமித் ஷாவையும் ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறீர்கள்? போட்டுத்தள்ளுங்கள் என தரக்குறைவாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் மீது பல்வேறு தரப்பிலிருந்தும் நடவடிக்கை எடுக்கும்படி மனுக்கள் குவிந்து வருகின்றன. பாஜக் தேசிய தலைவர் ஹெச்.ராஜா தமிழக டிஜிபியிடம் மனு கொடுத்துள்ளார். நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.
அவர் எப்போதும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை மனதில் வைத்து ஹெச்.ராஜா போட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘’2019ல் நடந்த குற்றத்திற்கு 2019 திலேயே நடவடிக்கை தேவை. இல்லையெனில் 2020 போராட்ட ஆண்டாகத் துவங்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு கருத்து தெரிவித்துள்ள பலரும், நியாயம் கிடைக்க போராட்டம் முக்கியம் என்று ஒத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி. இதைப்போல தான் CAA NRC எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? எனவும், வருடம் பிறப்பதற்குள் இப்படியா..? நல்லது பிறக்கட்டும் வாயைக் கழுவுங்கள் எனப் பலரும் எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.