டெங்கு இருந்தா என்ன? போனா என்ன? நீங்க எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வந்துடுங்க..! மருத்துவர்களை அழைக்கும் அட்டூழியம்..!
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு அரசு ஊழியர்களை வரவழைத்து கூட்டம் காட்டும் அவலம் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாபெரும் மேடை அமைக்கப்பட்டு பிரமாண்ட விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் விழாவிற்கு வரும் கூட்டம் குறைவாகவே உள்ளது. கூட்டம் என்றே கூறமுடியாத அளவிற்குத்தான் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளது.
நடுநிலையாளர்கள், பொதுமக்கள், மற்ற கட்சியினர் என அவர்கள் அல்லாமல், நூற்றாண்டு விழா நடக்கும் மாவட்டத்தில் உள்ள அதிமுக, அவர்களின் தொண்டர்களாக கூறும் எண்ணிக்கையினரும் எம்.ஜி.ஆரின் ரசிகர்களும் வந்தாலே கூட்டம் அலைமோத வேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் அதற்கு நேர்மாறாக நாற்காலிகள் காலியாக உள்ளதை அப்பட்டமாக பார்க்க முடிகிறது.
எனவே கூட்டம் காட்டுவதற்காக அரசுப் பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் அதற்கும் உயர்நீதிமன்றம் ஆப்பு அடித்துவிட்டதால் கூட்டம் காட்ட முடியாமல் பழனிசாமி அரசு திகைத்து வருகிறது. இதனால் அரசு ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளுமாறு, விழா நடைபெறும் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. அழைப்பு விடுக்கப்படுகிறதா? அல்லது வந்துதான் ஆக வேண்டும் என்ற மிரட்டல் விடுக்கப்படுகிறதா? என எண்ணத் தோன்றுகிறது.
மற்ற துறை ஊழியர்களை அழைப்பதே அநியாயம். அதிலும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.
டெங்குவால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலர் இறந்துகொண்டிருக்கின்றனர். மருத்துவ அவசரநிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழும் அளவிற்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலையில், மக்களைப் பற்றிய கவலை எதுவும் இல்லாமல், நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே விழா அழைப்பு வழங்குவது என்பது அட்டுழியத்தின் உச்சம்.
கூட்டம் வரவில்லை என்றால் நாற்காலிகளை குறைத்து போட வேண்டியதுதானே? அதைவிடுத்து அரசு ஊழியர்களையும் அரசு அதிகாரிகளையும் உட்காரவைத்தா கூட்டம் காட்ட வேண்டும்?