சர்வதேச ஆயுதக்கடத்தல் வழக்கு..! கனிமொழியை தொடர்பு படுத்தி சு.சுவாமி வெளியிட்ட பகீர் தகவல்..!
பிஎஸ்பிபி பள்ளியின் இந்த நிலைக்கு காரணமானவராக கருதப்படும் கனிமொழியை குறி வைத்து சுப்ரமணியன் சுவாமி ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் சர்வதேச ஆயுதக்கடத்தல் வழக்கில் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐயால் தேடப்படும் பாதர் கஸ்பர் ராஜ் என்பவர் தற்போது தூத்துக்குடி எம்பி கனிமொழியின் பாதுகாப்பில் இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியிருந்தார்.
சர்வதேச ஆயுதக்கடத்தல் வழக்கில் தேடப்படும் நபர் திமுக எம்பி கனிமொழியின் பாதுகாப்பில் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்ட ட்வீட் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுக்க திமுக எம்பி கனிமொழி மிக முக்கிய காரணம். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் குறித்த விவரத்தை முதலில் வெளியிட்டது பாடகி சின்மயி. ஆனால் கனிமொழி இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகு தான் போலீஸ் நடவடிக்கை தொடங்கியது. மாணவிகளை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கிய ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டான். அத்துடன் பள்ளி நிர்வாகிகளையும் போலீஸ் விசாரணைக்கு அழைத்தது. அந்த வகையில் பிஎஸ்பிபி பள்ளி இப்படி ஒரு சிக்கலை எதிர்கொள்ள காரணமாக இருந்தவர் கனிமொழி என்றே கூறலாம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிஎஸ்பிபி பள்ளிக்கு ஆதரவாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி களம் இறங்கினார். பிஎஸ்பிபி பள்ளிக்கு ஆதரவாக தானே நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாகவும் அறிவித்தார். அத்தோடு தமிழகத்தில் பிராமணர்களை உள்நோக்கத்தோடு குறி வைத்து பிஎஸ்பிபி பள்ளிக்கு இடைஞ்சல் கொடுத்தால் திமுக அரசை கலைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்றும் சுப்ரமணியன் சுவாமி எச்சரித்தார். இதனை தொடர்ந்தே தமிழகத்தில் பிஎஸ்பிபி பள்ளிக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டது.
ஆசிரியர் ராஜகோபாலனோடு இந்த விவகாரத்தை முடித்துக் கொள்ளும் அளவிற்க போலீசார் வந்துவிட்டதாக தெரிகிறது. அதனால் தான் ஏற்கனவே ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் அளித்தும் அதனை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்கிறார்கள். அத்தோடு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரம் குறித்து நேரில் ஆஜராகுமாறு பிஎஸ்பிபி பள்ளியின் நிர்வாகிகளுக்கு குழந்தைகள் நல கமிசன் சம்மன் அனுப்பியும் யாரும் ஆஜராகவில்லை. இதன் மூலம் இந்த விவகாரத்தில் பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகம் மேலிடத் தொடர்புகள் மூலம் விசாரணையில் இருந்து தப்பிவிட்டதாக கூறுப்படுகிறது.
இந்த நிலையில் பிஎஸ்பிபி பள்ளியின் இந்த நிலைக்கு காரணமானவராக கருதப்படும் கனிமொழியை குறி வைத்து சுப்ரமணியன் சுவாமி ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் சர்வதேச ஆயுதக்கடத்தல் வழக்கில் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐயால் தேடப்படும் பாதர் கஸ்பர் ராஜ் என்பவர் தற்போது தூத்துக்குடி எம்பி கனிமொழியின் பாதுகாப்பில் இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியிருந்தார். கடந்த 2009ம் ஆண்டுக்கு முன்பு வரை விடுதலைப்புலிகளுக்காக ஆயுதக்கடத்தல் செய்து வந்த கஸ்பர் ராஜை அமெரிக்க புலனாய்வுத்துறை தேடி வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே சென்னை சங்கமம் எனும் நிகழ்வை கனிமொழியுடன் இணைந்து கஸ்பர் ராஜ் நடத்தியதாக கூறியிருந்த சுப்ரமணியன் சுவாமி பிறகு கனிமொழியிடம் பண மோசடி செய்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் கஸ்பர் ராஜ் உடனான தொடர்பை கனிமொழி துண்டித்துவிட்டதாகவும் சுப்ரமணியன் சுவாமி விளக்கம் அளித்துள்ளார். பிஎஸ்பிபி பள்ளிக்கு எதிராக கருத்து தெரிவித்தால் என்கிற ஒரே காரணத்திற்காக கனிமொழியை சர்வதேச ஆயுதக்கடத்தல் வழக்குடன் தொடர்பு படுத்தி சுப்ரமணியன் சுவாமி வெளியிட்ட ட்வீட் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.