என்னை அவமதித்துவிட்டார்.. நகராட்சி ஆணையர் மீது முன்னாள் அமைச்சர் தங்கமணி பரபரப்பு குற்றச்சாட்டு..!
அதிமுக சார்பில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் சம்பந்தப்பட்ட உபகரணங்கள் மாவட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளன. அண்மையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனை அரசியலாக்க விரும்பவில்லை.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை களில், அரசுடன் இணைந்து செயல்பட அதிமுக தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, பரமத்திவேலூர் தொகுதி எம்.எல்.ஏ. சேகர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மெகராஜை சந்தித்து கொரோனா நோயாளிகளுக்கான வசதிகளை அதிகரித்து கொடுப்பது தொடர்பான கோரிக்கை மனுக்களை வழங்கினர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தங்கமணி;- நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அதற்குரிய வசதிகள் இங்கே இல்லை.
அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் போதிய அளவில் இல்லை. இது தொடர்பாக கூடுதல் படுக்கை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம். அதிமுக சார்பில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் சம்பந்தப்பட்ட உபகரணங்கள் மாவட்டங்களுக்கு வழங்கப்பட உள்ளன. அண்மையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனை அரசியலாக்க விரும்பவில்லை.
இந்த நோய்த் தொற்றுக் காலத்தில், முதல்வர் சொன்னதுபோல் நாங்களும் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம். அதிமுக சார்பில் தற்போது குமாரபாளையம் அம்மா உணவகங்களில் மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அம்மா உணவகத்தில் அதிமுக சார்பில் இலவச உணவு வழங்குவது சம்பந்தமாக அங்குள்ள ஆணையரைத் தொடர்புகொண்டு பேசினேன். ஆனால், அவர் அலட்சியமாக எனது போன் இணைப்பைத் துண்டித்து விட்டார் என தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளேன் என்றார்.