முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இந்திரா காந்தி அமைதி விருது....
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இந்திரா காந்தி அமைதி விருது....
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இந்திரா காந்தி அமைதி விருது வழங்கப்பட உள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரில் அமைதி விருது கடந்த 1986-இல் உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளான நவம்பர் 19-ஆம் தேதி இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த விருதை வழங்கும் இந்தியா காந்தி நினைவு அறக்கட்டளையின் செயலாளர் சுமன் துபே சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான சர்வதேச நடுவர் குழுவானது இந்த ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை ஒருமனதாகக் தேர்வு செய்துள்ளது.
நாட்டை 2004 முதல் 2014 வரை சிறப்பான முறையில் தலைமை தாங்கியது, உலக அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது ஆகிய காரணங்களுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
அண்டை நாடுகளுடனும் உலகின் முன்னணி நாடுகளுடன் இந்தியாவின் உறவுகளை மேம்படுத்துவதிலும், நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சி மற்றும் அனைத்துக் குடிமக்களின் நலவாழ்வுக்கும் மன்மோகன் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பதவி வகித்த மன்மோகன் சிங், பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசில் நிதியமைச்சராகத் திறம்பட பணியாற்றினார். அவரது பதவிக்காலத்தில்தான் நாட்டில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.