ஸ்விஸ் வங்கியில் கொட்டப்படும் பணம்….. கடந்த மூன்று ஆண்டுகளில் டெபாசிட் செய்யப்பட்ட இந்தியர்களின் பணம் எவ்வளவு தெரியுமா ?
சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள தொகை கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது 2016 ஆம் ஆண்டு இந்தியர்கள் 7000 கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் தங்களது கருப்புப் பணத்தை சுவிச்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்துள்ளதாக கூறப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, சுவிட்சர்லாந்தில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் மீட்கப்படும் என மோடி பல வாக்குறுதிகளுடன் ஆட்சியை பிடித்தார்.அந்தப் பணத்தை மீட்டு, இந்தியர்கள் ஒவ்வோருவரின் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என பாஜக கூறியதாகவும் பேசப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டதும் கருப்புப்பணத்தை மீட்கும் நடவடிக்கையாக தனி குழு அமைத்தார். ஆனால், அதன் பின்னர், அந்த வேலையில் எந்த முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை. இந்நிலையில், சுவிச்சர்லாந்தில் உள்ள நேஷனல் வங்கி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது.
இதில் கடந்த 2016-ம் ஆண்டை விட சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்துள்ள இந்தியர்களின் பணம் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டள்ளது. . அதாவது, 1.01 பில்லியன் சுவிஸ் பிராங்குகள், இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,000 கோடிகளுக்கும் மேல் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ளனர்.
ஆண்டு வாரியான விபரங்களின்படி 2017-ல் மொத்தமாக வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பணம் 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதாவது 2017-ம் ஆண்டில் மட்டும் 1.46 ட்ரில்லியன் இந்திய மதிப்பில் சுமார் 100 லட்சம் கோடி டெபாசிட் ஆகியுள்ளது.
கடந்த 2016-ல் அதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியர்களின் டெபாசிட் 45 சதவிகிதம் குறைந்தது.. ஆனால், இந்த ஆண்டு அதற்கு நேர்மாறாக டெபாசிட் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு விபரங்களின்படி நேரடியாக இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் வைத்திருக்கும் தொகை சுமார் ரூ.6,891 கோடியாகும். 2006-ம் ஆண்டு இறுதியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருந்த தொகை மட்டும் ரூ.23 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இது 10-ல் ஒரு பங்கு குறைந்தது.
இந்தச் சாதனை அளவுக்குப் பிறகு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் அதிகரித்திருப்பது இது மூன்றாவது முறையாகும். 2011-ல் 12 சதவிகிதம், 2013-ல் 43 சதவிகிதம் தற்போது 2017-ல் 50.2 சதவிகிதம் அதிகரித்தது. அதாவது, 2004-ல் 56 சதவிகித அதிகரிப்புக்குப் பிறகு தற்போது 2017-ல் 50 சதவிகிதத்துக்கும் சற்று கூடுதலாக இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கி இருப்பில் அதிகரித்துள்ளது.
கருப்புப் பணத்தை மீட்போம் என உறுதியளித்து ஆட்சிக்கு வந்த பாஜக தற்போது இப்பிரச்சனையில் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.