அரசியலில் நேரடியாக தலையிடும் ராணுவம்...?? கேள்விக்குறியாகும் மோடி, அமித்ஷா ஆளுமை..??
துணை ராணுவப் படை, போன்ற அமைப்புகள் சட்டம் ஒழுங்கை காக்கும் பணியில் இருக்கும் போது ராணுவத் தளபதி மக்களின் விஷயங்களில் தலையிடுவது ஏன்.
இந்திய ராணுவத் தளபதி போராட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை விமர்சித்து கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது சீருடை அதிகாரி ஒருவர் இப்படி வெளிப்படையாக அரசியல்வாதி போல பேசுவது சரியான அணுகுமுறை இல்லை என அவரை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளன. திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது . இச்சட்டம் இஸ்லாமியர்களை குறிவைத்து கொண்டுவரப்பட்டது என்றும் , அவர்களை நாட்டில் இருந்து தனிமைப்படுத்த பஜக கையிலெடுக்கும் ஒரு துருப்புச் சீட்டுதான் இந்த சட்டம் என்றும் இஸ்லாமியர்கள் இதை கண்டித்து வருகின்றனர் . தமிழகம் , கேரளம், கர்நாடகம் , மேற்கு வங்கம் , உத்திரபிரதேசம் , வடகிழக்கு மாகாணங்கள் என போராட்டங்கள் பரவியுள்ளன..
இச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் தீவிரம் காட்டி வரும் நிலையில் ஆங்காங்கே வன்முறைகளும் நடந்து வருகின்றன . இந்த நிலையில் விரைவில் ஓய்வுபெற உள்ள இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார் , குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் , வணிகர்கள் , தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் தீவிரவாதிகள் என கடுமையாக விமர்சித்துள்ளார் . ஒரு போராட்டம் அமைதியான முறையில் நடக்க வேண்டும், யார் ஒருவர் மக்களை சரியான பாதையில் வழி நடத்துகிறாரோ அவரே சிறந்த தலைவராக இருக்க முடியும் , மக்களை தவறான பாதையில் வழி நடத்துபவர்கள் தலைவர்களாக இருக்க முடியாது. வன்முறை கலவரம் போன்றவற்றில் ஈடுபடுவது தலைமைப்பண்பு ஆகாது, ஏராளமான பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என அவர் விமர்சித்துள்ளார்.
உண்மையான தலைவர் யார் என்பதை அடையாளம் கண்டு மாணவர்கள் அவர்களைப் பின்பற்ற வேண்டும், ஆனால் அதில்தான் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராணுவ தளபதி ஒருவர் வழக்கத்திற்கு மாறாக தன் எல்லையை மீறி , மாணவர்கள் , பொதுமக்கள் , வணிகர்கள் , அரசியல் தலைவர்கள் என அனைவரையும் விமர்சித்து பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . காவல்துறை , துணை ராணுவப் படை, போன்ற அமைப்புகள் சட்டம் ஒழுங்கை காக்கும் பணியில் இருக்கும் போது ராணுவத் தளபதி மக்களின் விஷயங்களில் தலையிடுவது ஏன். இது அதிகப்பிரசங்கித்தனம் என்றும், மோடியின் ஆட்சியில் நிர்வாகம் எந்தளவிற்கு சீர்கெட்டு இருக்கிறது எனபதற்கு இதுவே சாட்சி என்றும் எதிர்க் கட்சிகளும் பத்திரிக்கைகள் இதை விமர்சித்து வருகின்றனர்.
இதே கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பதிவு செய்துள்ளார் , இச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராடி வரும் மாணவர்களுக்கு எதிராக ராணுவ ஜெனரல் நேரடியாக கண்டனம் தெரிவித்திருப்பது, உயர் பதவியில் உள்ள சீருடை அதிகாரி ஒரு அரசியல்வாதி போல தலையிட்டு இருப்பது, நிர்வாக சீரழிவு என்றும் பாகிஸ்தானில்தான் இராணுவம் அரசியலில் தலையீடு செய்வது வழக்கம் எனவே அந்த வழியில் இந்தியா பயணிக்கிறதா என்ற ஐயத்தையும் இது ஏற்படுத்தியுள்ளது என மக்கள் விமர்சித்து வருகின்றனர் ..