உஷார் மக்களே... அடுத்த 4 வாரங்கள் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கும்... மத்திய அரசு பகீர் எச்சரிக்கை...!
கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருவதாக எச்சரித்துள்ள மத்திய அரசு, அடுத்த 4 வாரங்கள் மிகவும் முக்கியமான காலகட்டம் என அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காத வேகத்தில் பரவி வருவதாக எச்சரித்துள்ள மத்திய அரசு, அடுத்த 4 வாரங்கள் மிகவும் முக்கியமான காலகட்டம் என அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா 2வது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. 20 ஆயிரமாக சரிந்திருந்த தினசரி பாதிப்பு தற்போது மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால், பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. வைரஸ் பரவல் அதிகமுள்ள மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
ஏற்கனவே, கொரோனா பரவல் தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, அதைத் தொடர்ந்து நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடப்பதால் நாடு தழுவிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்த நிலையில், இனி அதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கொரோனா 2வது அலை தொடர்பாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் மற்றும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூட்டாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வி.கே.பால் கூறுகையில்;- நாட்டில் தொற்று நோய் சூழல் மிக மோசமான கட்டத்தில் உள்ளது. தினசரி பாதிப்பு வேகமாக அதிகரிக்கிறது. முதல் அலையை காட்டிலும் கொரோனா 2வது அலையின் வேகம் மிக அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த வழக்கம் போல் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல், பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
2வது அலையை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். குறிப்பாக, அடுத்த 4 வாரங்கள் மிக மிக முக்கியமானது. இதில், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்றார்.