ரியல் ஹீரோ அபி நந்தனுக்காக வரலாற்று நிகழ்ச்சியை ரத்து செய்த இந்தியா – பாகிஸ்தான்… அது என்ன தெரியுமா ?
இந்தியாவின் வீரத்திருமகன் அபிநந்தனுக்காக முதல் முறையாக இந்தியா - பாகிஸ்தான் வாகா எல்லையில் இன்று கொடி இறக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 1959 ஆம் ஆண்டு முதல் நாள்தோறும் நடக்கும் இந்த நிகழ்ச்சி இன்று கைவிடப்பட்டது.
விமான தாக்குதலின்போது பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விங் கமாண்டர் அபி நந்தன் இன்று விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார். பின்னர் லாகூரில் இருந்து சாலை வழியாக வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுடன் பாகிஸ்தான் இராணுவ வாகனங்கள் புடை சூழ வாகா எல்லை வந்தடைந்தது. வாகா எல்லை வந்தடைந்த அபிநந்தன், அமிர்தசரஸ் துணை ஆணையாளர் சிவ் துலர் சிங் தில்லான், இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அபிநந்தனை இந்தியா வசம் ஒப்படைக்க இறுதிகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா அழைத்து வரப்பட்ட அபிநந்தனுக்கு முழு மருத்துவ பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அபிநந்தன் ஒப்படைக்கப்படுவதையொட்டி, வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. கொடி இறக்கம் என்பது சூரியன் மறைவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் நிகழ்த்தப்படும். ஆனால், இன்று இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த தற்கொலை தாக்குதல் காரணமாகவும், 2016 ஆம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக கொடி இறக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், முதல் முறையாக ஒரு தனிநபர் இந்திய எல்லைக்குள் வருவதற்காக கொடி இறக்கம் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.