தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீடு உட்பட 10 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ராமமோகன் ராவ் வீடு, அலுவலகம், அவரது மகன் வீடு, 5 தொழிலதிபர்களின் வீடுகள் உட்பட 10 இடங்களில் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக தலைமைச் செயலாளர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது என்பது தமிழக அரசியலில் இதுவே முதல் முறை என்பதால், ஊடகங்கள் விறுவிறுப்படைந்துள்ளன.

முன்னதாக, தமிழக அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமானவரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இடம்பெற்றிருந்த சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையின் போது, கணக்கில் வராத ரூ.134 கோடி ரொக்கம் மற்றும் 170 கிலோ தங்கம் உட்பட ஏராளமானசொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.30 கோடி புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக இருந்தது.
இந்த நிலையில், சேகர் ரெட்டி வீடுகளில் சோதனை நடத்தியபோது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ராமமோகன் ராவ் வீட்டில் சோதனை நடப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சேகர் ரெட்டியுடன் ராமமோகன் ராவுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்தான் வருமான வரித்துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டிருப்பதாக கூறப்பட்டாலும், அதே நேரம், ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ராமமோகன் ராவின்உறவினர் வீட்டிலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது மிகவும் திட்டமிடப்பட்டு, தீவிர விசாரணைக்குப் பிறகு வருமான வரித்துறையினரால் மேற்கொள்ளப்படும் சோதனை என்பது உறுதியானது என அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.
