துரை முருகனை அடுத்து வேலூர் வங்கி மேலாளர் வீட்டில் ரெய்டு !! அதிர்ச்சியில் திமுக !!
திமுக பொருளாளர் துரை முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்த நிலையில் காட்பாடியிலுள்ள கனரா வங்கி மேலாளரின் வீட்டில் இன்று வருமான வரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் கனரா வங்கி மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இன்று இவரது வீட்டில் அதிரடியாக நுழைந்த வருமான வரித் துறை அதிகாரிகள் 7 பேர் சோதனையிடத் தொடங்கினர். முறையாக வரி செலுத்தாத காரணத்தினால் இந்த சோதனை நடத்தப்படுவதாகக் கூறப்பட்டது.
மூன்று நாட்களுக்கு முன்னர், ஆந்திர எல்லைப்பகுதியில் பள்ளிகொண்டாவிலுள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து 43 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர் வருமான வரித் துறையினர்.
கடந்த மாத இறுதியில் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்தைக் குறிவைத்து சோதனை நடத்தியது வருமான வரித் துறை.. அவரது தந்தை துரைமுருகன் வீடு, கிங்ஸ்டன் கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 10.50 லட்சம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது.
கடந்த 1ஆம் தேதியன்று துரைமுருகனின் நண்பர் பூஞ்சோலை சீனிவாசனுக்குச் சொந்தமான குடோனில் சோதனை மேற்கொண்டது வருமான வரித் துறை. அப்போது 11.48 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.
இந்த நிலையில், தற்போது காட்பாடி வங்கி மேலாளரின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனையில் கைப்பற்றியது குறித்து, இதுவரை வருமான வரித் துறை சார்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.