income tax notice sarathkumar vijayabaskar

அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரது வீடுகளில் நேற்று முன்தினம் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது ஆர்.கே,நகர் தொகுதியில் தினகரனுக்கு வாக்களிக்க கோரி பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதையடுத்து, நாளை அவர்கள் மூவரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அமைச்சர் விஜய பாஸ்கர், சரத்குமார் மற்றும் கீதா லட்சுமி ஆகியோரது வீடுகள், அலுவலகங்கள்,கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அமைச்சர் விஜய பாஸ்கர், வீட்டில் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்கள் சிக்கின.

நடிகர் சரத்குமார், தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு 7 கோடி ரூபாய், அமைச்சர் விஜய பாஸ்கரிடம் இருந்தது பெற்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சரத்குமார் வீட்டில் சோதனை நடைபெற்றது.

இதேபோல் கீதாலட்சுமி, அமைச்சர் விஜய பாஸ்கருக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற முறையில் அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர்.

இவர்கள் மூவரிடமிருந்தும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ,எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி மற்றும் விஜயபாஸ்கரின் நண்பர்கள் இருவர் ஆகிய 5 பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அதில் நாளை காலை 10 மணிக்கு இந்த 5 பேரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் அமைச்சர் உள்ளிட்டோருக்கு பெரும் சிக்கலை உருவாக்கும் என கூறப்படுகிறது.