நீங்க வாங்கிய நன்கொடைகள் சட்டவிரோதம்…ரூ.30 கோடி வரி கட்டுங்க… ஆம் ஆத்மிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்
ஆம் ஆத்மி பெற்ற நன்கொடை அனைத்தும் சட்டவிரோதம் என்பதால், ரூ.30.67 கோடி வருமான வரி செலுத்தக்கோரி வருமானவரித்துறை அந்த கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸுக்கு டிசம்பர் 7-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி தனது 5-வது ஆண்டு விழாவை கொண்டாடி வரும் நிலையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
அரசியல் பழிவாங்கும் உச்சம்
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது-
ஆம் ஆத்மி கட்சி இதுவரை பெற்ற நன்கொடைகள் அனைத்தும் சட்டவிரோதமானது என வருமான வரித்துறையினர் கூறுகின்றனர். அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த நோட்டீஸை மத்திய அரசு வருமானவரித்துறை மூலம் அனுப்பி இருக்கிறது.
இந்திய வரலாற்றிலேயே ஒரு அரசியல் கட்சி பெற்ற அனைத்து நன்கொடைகளும் சட்டவிரோதம் என இப்போதுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பெற்ற அனைத்து நன்கொடைகளும் முறைப்படி கணக்கில் கொண்டு வரப்பட்டுள்ளன. இது அரசியல் பழிவாங்களின் உச்சக்கட்டம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பல முறை நோட்டீஸ்
ஆம் ஆத்மி கட்சிக்கு வருமானவரித்துறையினர் நோட்டீஸ் அனுப்புவது புதிதானதுஅல்ல. ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து வருமானவரித்துறையினர் பலமுறை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து பெற்றபணத்துக்கு கணக்கு இல்லை, அதை இணையதளத்தில் வௌியிடவில்லை என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
கடந்த ஆண்டு வருமானவரித்துறையினரிடம் தாக்கல் செய்யப்பட்ட நன்கொடையாளர்கள் பட்டியலில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறி வருமானவரித்துறையினர் ஆம் ஆத்மி கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.