In the middle of the Kaavi rule Reign of spirit in the state - K.Veramani

கடலூர்

மத்தியில் காவி ஆட்சியும், மாநிலத்தில் ஆவி ஆட்சியும் நடக்கிறது. இந்த இரண்டு ஆட்சியும் நீடிக்க கூடாது என்று கடலூரில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

கடலூரில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், “திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் தேறி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் முழு உடல் நலம் பெற்று மீண்டும் தன் தொண்டை தொடர வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பமாகும்.

பெரியார் சாதி ஒழிப்பு போராட்டம் நடத்தி 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி அனைத்துக் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் ஒத்தக் கருத்துள்ள, சமயத்தைச் சார்ந்தவர்கள் பங்கேற்கும் மாநாடு நவம்பர் 26-ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடக்கிறது.

இதில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். தற்போதைய அரசு இந்த பிரச்சனையில் கவனம் செலுத்தாமல் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது.

சீர்காழியில் என்.எல்.சி.யின் அனல் மின்நிலையம் அமைக்கும் திட்டம், நீட் தேர்வு போன்ற விவகாரங்களில் தமிழக அரசு மாநில உரிமைகளை காக்கவில்லை.

மத்தியில் காவி ஆட்சியும், மாநிலத்தில் ஆவி ஆட்சியும் நடக்கிறது. இந்த இரண்டு ஆட்சியும் நீடிக்க கூடாது.

சிதம்பரம் அண்ணாமலை மற்றும் சேலம் பெரியார் ஆகிய பல்கலைக் கழகங்களில் ஜோதிட பாடத் திட்டம் இடம்பெற்று இருப்பதை விலக்காவிட்டால் அதை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும்.

பத்து திரைப்படங்களில் நடித்துவிட்டால் உடனே சினிமா கவர்ச்சியை வைத்து முதலமைச்சர் பதவியை பிடித்து விடுவோம் என்கிறார்கள். அவர்களை மக்கள் ஆதரிக்கக் கூடாது. அவர்களை ஆதரிக்கும் அளவுக்கு தமிழக மக்கள் ஏமாளிகளும் அல்ல. இதற்குமுன் சினிமா துறையில் இருந்தவர்கள் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் கொள்கை இருந்தது” என்று அவர் தெரிவித்தார்.