டெல்லியில் மண்டியிடும் மானங்கெட்ட அரசுதான் அதிமுக அரசு..! - வசைபாடும் ஸ்டாலின்
திமுக ஆட்சியிலும் ஜெயலலிதா ஆட்சியிலும் நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டு வர முடியவில்லை எனவும் ஆனால் தற்போது, டெல்லியில் மண்டியிடும் மானங்கெட்ட அரசுதான் அதிமுக அரசு எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது திமுக இயக்கத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது எனவும், திமுக ஆட்சியிலும் ஜெயலலிதா ஆட்சியிலும் நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டு வர முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது, டெல்லியில் மண்டியிடும் மானங்கெட்ட அரசுதான் அதிமுக அரசு எனவும் தமிழகத்தின் சுயமரியாதையை அடமானம் வைக்கும் அரசாக குதிரை பேர அரசு செயல்படுவதாகவும் விமர்சித்தார்.
இதைதொடர்ந்து பாஜக அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். அதாவது, நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு கிடைக்கும் என நிர்மலா சீதாராமன் கூறியது என்ன ஆயிற்று எனவும், சமூக நீதிக்கு உலை வைக்கும் வகையில் மத்தியில் இருக்கும் பாஜக அரசு செயல் பட்டு வருகிறது எனவும் குற்றம் சாட்டினார்.
ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பிரச்சனைகள் தீரும் என கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று எனவும், கருப்பு பணத்தை மீட்டு மக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என கூறியது என்னவாயிற்று கேள்வி எழுப்பினார்.