திமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் ரூ. 40 ஆயிரம் கோடி கடன்... வசைபாடிய ஹெச்.ராஜா..!
திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மூன்று மாதங்களில் ரூ.40 ஆயிரம் கோடி கடனை வாங்கியிருக்கிறது. இதுதான் திமுக அரசின் சாதனை என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
கமுதியில் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனாவைக் காரணம் காட்டி கிராமசபை கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால், அப்போது அதையும் மீறி திமுக பல இடங்களில் கிராமசபை கூட்டத்தை நடத்தியது. தற்போது திமுகதான் ஆட்சியில் உள்ளது. ஆனால், கொரோனாவை காரணம் காட்டி கிராமசபை கூட்டம் நடத்த தடை என்கிறது. தமிழக அரசு வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள் தவிர, வேறு புதிதாக எந்தத் திட்டங்களும் பெரிதாக இல்லை.
தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார்கள். ஆனால், இப்போது தகுதி உள்ளவர்களை கண்டறிந்து வழங்கப்படும் என்கிறார்கள். திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மூன்று மாதங்களில் ரூ.40 ஆயிரம் கோடி கடனை வாங்கியிருக்கிறது. இதுதான் திமுக அரசின் சாதனை. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. அதில், 40 ஆயிரம் கோயில்களில் ஏற்கனவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகப் பணியாற்றி வருகிறார்கள். இதில் தமிழக முதல்வரும், அறநிலையத்துறை அமைச்சரும் தமிழக மக்களை திசை திருப்புகிறார்கள். என்னுடைய கேள்வி, மற்ற மத வழிபாடுகளையும் தமிழில் நடத்த திமுக அரசு வலியுறுத்துமா? என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.