சொந்தக் காலில் நிற்காமல் மிஸ்டுகால் கொடுக்கும் கட்சி எதிர்க்கட்சியல்ல..! பாஜகவை கலாய்க்கும் கி.வீரமணி
மத்திய அரசால் பறிக்கப்படும் மாநில உரிமைகளை மீட்பதே திராவிட மாடல் ஆட்சி என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்
மத்திய அரசால் மாநில உரிமை பறிப்பு
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி தலைமையில் மாநில உரிமைகள் மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மத்தியில் ஆளும் பாஜக அரசால் மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதாலும், திமுக அரசு மற்றும் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் மாநில உரிமைகள் குறித்து தமிழக முதல்வரும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் திராவிட கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் மாநில உரிமைகள் மீட்பு விளக்க பொதுக்கூட்டம் நடத்தி வரும் நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய திராவிட கழக தலைவர் கி. வீரமணி மத்தியில் ஆளும் பாஜக அரசால் மாநில உரிமைகள் அனைத்தும் பறிக்கப் பட்டு வருவதை மீட்டு எடுப்பதே திராவிட மாடல் ஆட்சி என தெரிவித்தார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தாங்கள்தான் எதிர்க்கட்சி என பொய் பரப்புரை செய்து வருவதாக விமர்சித்தார்.
மிஸ்டுகால் கட்சி பாஜக
பாஜக எப்பொழுதும் தமிழகத்தில் ஒரு கட்சியாக தான் இருக்க முடியுமே தவிர எதிர்க்கட்சியாகவோ, ஆளுங்கட்சியாகவோ ஆக முடியாது என கூறினார். சொந்தக்காலில் நிற்கும் கட்சிகள் தான் தமிழகத்தில் எதிர்க்கட்சியாகவும் ஆளும் கட்சியாகவும் இருக்க முடியும் மிஸ்டு காலில் கட்சி நடத்துபவர்கள் எப்பொழுதும் எதிர்க்கட்சியாக ஆக முடியாது என உறுதிபட தெரிவித்தார். சமத்துவ சிந்தனை, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட பெரியாரின் சிந்தனையால் தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக 100 ஆண்டுகள் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது இதுதான் திராவிட மாடல் ஆட்சி என கி.வீரமணி பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இதையும் படியுங்கள்
திமுகவோட B டீம் தான் சசிகலா.. அதனால் தான் வழக்கே போடவில்லை.. போட்டு தாக்கும் ஜெயக்குமார்.!