"வருமான வரி சோதனையில் அரசியல் தலையீடு கிடையவே கிடையாது" - மறுக்கும் இல.கணேசன்
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆண்டு தோறும், ஏப்ரல் 14ம் தேதி பா.ஜ.க. தொடங்கிய நாள். இதையொட்டி மாவட்டம் தோறும் கலந்துரையாடல் கூட்டம் நடத்த இருக்கிறோம்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டும் என பாஜக சார்பில் வலியுறுத்தி வருகிறோம். இதற்கு, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை தள்ளி வைக்கவோ, நிறுத்தவோ சாத்தியமில்லை.
ஆர்.கே.நகரில் ஓ.பி.எஸ். அணியினர் சவப்பெட்டி பிரசாரமும், தினகரன் பணத்தை வைத்து பிரசாரமும் செய்து வருகிறார்கள்.
தமிழகத்தில் அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கும் தகவலின்பேரில் சோதனை நடத்தப்பட்டது.
புகாரின்படி சோதனை நடத்த அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. எனவே இதில் அரசியல் தலையீடு கிடையவே கிடையாது.
மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைக்கும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு எந்த தொடர்பும் இல்லை.