IIT Madras Sanskrit song stuffing

சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த மத்திய அரசு நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக சமஸ்கிருத பாடலான மகா கணபதி பாடல் இசைக்கப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது.

சென்னை ஐஐடி உடன் தேசிய துறைமுகம், நீர்வழிப்பாதை, கடற்கரை தொழில்நுட்பத்துறை சார்பில் ஒப்பந்தம் செய்து கொள்ளும் விழா இன்று நடைபெற்றது. சாகர்மாலா திட்டத்தின்கீழ், சென்னை ஐஐடி தேசிய தொழில் நுட்ப மையம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி, இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவின் துவக்கத்தில் எப்போதும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுவதே வழக்கம். ஆனால்ர, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்குப் பதிலாக சமஸ்கிருத பாடலான மகா கணபதி என துவங்கும் பாடலை மாணவர்கள் பாடினர். 

மத்திய அமைச்சர் கலந்து கொண்ட விழாவில், தமிழை அவமதிக்கும் விதமாக சமஸ்கிருத மொழி பாடல் பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

விழாவில் சமஸ்கிருத பாடல் பாடப்பட்டது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கரன் ராமமூர்த்தி விளக்கமளித்துள்ளார். மாணவர்கள் தாமாக முன்வந்தே சமஸ்கிருத பாடலை பாடியனர் என்றும், சமஸ்கிருத பாடல் சர்ச்சை தேவையற்றது என்றும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும் என்றும் ஐஐடி இயக்குநர் தெரிவித்துள்ளார்.