அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை புறக்கணிக்க வேண்டும்.. தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்.
9 முதல் 12 வரை மாணவர்களுக்கான வகுப்புகளை உடனடியாக திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அரசு அப்படி அனுமதிக்கும் பட்சத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் நடத்தப்படும் என்றார்,
தமிழ்நாட்டில் விரைவில் பள்ளிகள் திறக்க வேண்டுமென தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. சென்னை தி நகரில் உள்ள தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அலுவலகத்தில் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வரும் சூழலில் விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டுமென தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை அமைச்சர் மற்றும் ஆணையரை சந்தித்து தங்களுடைய கோரிக்கை மனுவை அளித்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் மாற்று சான்றிதழ் இல்லாமல் பள்ளியில் மாணவ மாணவியருக்கான சேர்க்கை நடத்தக்கூடாது எனவும் மாணவர்கள் பாடங்களை முழுவதுமாக இணையவழி வாயிலாக கற்பதால் அது அவர்களுக்கு முழுமையான நிறைவினை அளிக்காது என தெரிவித்த அவர், 9 முதல் 12 வரை மாணவர்களுக்கான வகுப்புகளை உடனடியாக திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அரசு அப்படி அனுமதிக்கும் பட்சத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் நடத்தப்படும் என்றார்,
முதலில் 11ஆம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளையும் பின்னர் ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளையும் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அதேபோல் 9,10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷிப்ட் முறையில் வகுப்புகளை நடத்துவது எனவும் திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்த அவர் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளியை பெற்றோர்கள் புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்தார்.