“பணம் வாங்கியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகி விடுகிறேன்” – சரவெடி வெடிக்கும் தமீமுன் அன்சாரி...
எடப்பாடி தரப்பில் இருந்தோ ஒ.பி.எஸ் தரப்பில் இருந்தோ பணம் அல்லது தங்கம் வாங்கியதாக நிரூபிக்கபட்டால் பொது வாழ்வில் இருந்தே விலகி விடுவதாக மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி நடத்திய ரகசிய உரையாடல் ஒன்றில் சரவணன் எம்.எல்.ஏ பல அதிமுக எம்எல்ஏக்களுக்கு கூவத்தூரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறியுள்ள வீடியோ வெளியாகி நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், மனித நேய மக்கள் கட்சியின் தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்டோருக்கு பணம் கொடுக்கப்பட்டுவிட்டது என சரவணன் கூறியிருந்தார்.
இதற்கு மனித நேய மக்கள் கட்சியின் தமீமுன் அன்சாரி கடும் கண்டனமும் மறுப்பும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த தமீமுன் அன்சாரி சரவணன் தன்னை சந்தித்து வீடியோவில் வந்த கூற்றுகள் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், சரவணன் முதலில் கூறிவிட்டு இப்போது பயப்படுகிறாரா என்று எனக்கு தெரியவில்லை என்றும், கூறினார்.
எடப்பாடி தரப்பில் இருந்தோ ஒ.பி.எஸ் தரப்பில் இருந்தோ பணம் அல்லது தங்கம் வாங்கியதாக நிரூபிக்கபட்டால் பொது வாழ்வில் இருந்தே விலகி விடுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கூவத்தூரில் கூட்டணி குறித்து பேசும்போது செங்கோட்டையனிடம் தனது தொகுதி சார்ந்த 7 கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அன்சாரி, இதுபோன்ற வீண் குற்றசாட்டுகளை உங்களை போன்ற மீடியாக்கள் தான் பரப்புவதாக கேள்வி கேட்டவர் மீதே பாய்ந்தார்.
எடப்பாடி தரப்பிலும் ஒ.பி.எஸ் தரப்பிலும் ஆதரவு கேட்டார்களே தவிர ஒரு ரூபாய் கூட பண பேரம் பேசவில்லை எனவும், பொதுவாழ்வில் ஒரு நேர்மையான் கொள்கையை தாங்கள் கடைபிடித்து வருவதாகவும் தெரிவித்தார்.