வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதால் திமுகவினர் மக்களை சந்திக்கவில்லை, திரணி, தெம்பு இருந்தால் மக்களை சந்திக்க வேண்டியது தானே என கேள்வி எழுப்பிய அவர், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஸ்டாலின் மக்களை நேரடியாகச் சென்று சந்திக்காமல் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார். 

பல்வேறு எதிர்ப்பு, யுக்திகளை கையாண்டு பத்தாண்டுகள் கழித்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆட்சி பொற்ப்பேற்றது முதல் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. கொரோனா தொற்று, மழை வெள்ள நிவாரணம் போன்ற பணிகளில் அரசு செயல்பட்ட விதத்தை மக்கள் பாராட்டி வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும் எதிர்க்கட்சியான அதிமுக பாஜக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக நீட் தேர்வு விலக்கு, குடும்பத் தலைவனுக்கு மாதம் 1000 ரூபாய் நிதி உதவி, நகை கடன் ரத்து என கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை, பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் என திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வருகின்றன. இதையே நடந்துவரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சார வியூகமாக அதிமுக-பாஜக கையாண்டு வருகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால்தான் மக்கள் முன் செல்ல ஸ்டாலின் அஞ்சுகிறார், பிரச்சார களத்திற்கு நேரடியாக சென்றால் மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால்தான் அவர் காணொலிக் காட்சியின் மூலம் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில்தான் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 49 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் திருநாவுக்கரசு, மற்றும் 50 வது வார்டில் போட்டியிடும் சதீஷ்குமாரை ஆதரித்து சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் மத்தியில் அதிருப்தியையும் வெறுப்பையும் திமுக அரசு பெற்றுள்ளதால் செல்லும் இடங்களிலெல்லாம் அதிமுகவுக்கு மக்கள் வரவேற்பு அளித்து வருவதாகவும், அதிமுக மக்கத்தான வெற்றி பெறும் என்றும் கூறினார்.

மேலும், நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு என கூறிய அவர், அதற்கான சட்டப்பூர்வ போராட்டங்களுக்கு உறுதுணையாக இருப்போம், ஆனால் நீட் தேர்வை கொண்டு வந்தவர்களே ஒழிப்பதாக கூறுவது விநோதமாக கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் போல உள்ளதாகவும் விமர்சனம் செய்தார். தேர்தல் சட்டங்கள் எல்லாம் எதிர்கட்சிக்கு தான் ஆளுங்கட்சியினருக்கு இல்லை எனவும், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதால் திமுகவினர் மக்களை சந்திக்கவில்லை, திரணி, தெம்பு இருந்தால் மக்களை சந்திக்க வேண்டியது தானே என கேள்வி எழுப்பிய அவர், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஸ்டாலின் மக்களை நேரடியாகச் சென்று சந்திக்காமல் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

ஆடு தன் குட்டியை இறக்கி ஆழம் பார்ப்பது போல் ஸ்டாலின, உதயநிதி ஸ்டாலினை களத்தில் இறக்கிவிட்டு ஆழம்பார்க்கிறார் என கூறிய அவர், மக்கள் தான் இறுதி தீர்ப்பாளர்கள், நீட் தேர்வு குறித்து ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது அதற்காக எல்லாம் வன்முறையை கையாளக் கூடாது எனவும், வன்முறை ஊக்குவித்தல் கூடாது என்றும் பாஜக அலுவலகத்தில் குண்டு வீசியதற்கு கருத்து தெரிவித்தார். முறையாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் அதிமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.