நாங்கள் பதவி விலகினால்தான் தமிழ்நாடு விமோசனம் பெறும்! - தங்க தமிழ்செல்வன்
ஆண்டிப்பட்டி தொகுதிக்கு எம்.எல்.ஏ. வேண்டும் என்பதற்காகவே நான் தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெற முடிவெடுத்துள்ளேன் என்றும், நாங்கள் பதவி
விலகினால் தமிழ்நாடே விமோசனம் பெறும் என்றும் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளர் தங்க. தமிழ்செல்வன், ஆண்டிப்பட்டியில் இன்று
செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் 3-வது நீதிபதியிடம் சென்றாலும் நியாயம்
கிடைக்காது என்றார். மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றங்கள் கேலிக்கூத்தாகிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
அரசை எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது கட்சித்தாவல் தடை சட்டம் பாயவில்யே ஏன்? எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் பதவி வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னிடம் வரும் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. நான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன். ஆண்டிப்பட்டி தொகுதிக்கு எம்.எல்.ஏ., வேண்டும் என்பதற்காக நான் தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெற முடிவெடுத்துள்ளேன். 18 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்துவிட்டு, அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
18 எம்.எல்.ஏ.க்களும் தனித்தனியாக முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்று டிடிவி தினகரன் கூறிவிட்டார். சக நீதிபதி எங்களுக்கு ஆதரவாக சொல்கிறார்; தலைமை
நீதிபதி எங்களுக்கு எதிராக சொல்கிறார். எங்களுக்கு சாதகமாக சொன்னாலும், எதிராக சொன்னாலும் எடப்பாடி அரசுக்கு ஆபத்து. இந்த தீர்ப்பால் தற்போது ஆட்சி
எந்த ஆபத்தும் இல்லாமல் நடைபெற்று வருகிறது.
மத்திய - மாநில அரசுகளின் அவலநிலையை மக்கள் பார்த்துக் கொண்டுதான் வருகிறார்கள். இந்த மோசமான நிலையை மக்களிடம் எடுத்துக்
காட்டுவதற்காகத்தான் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். நாங்கள் பதவி விலகினால் தமிழ்நாடே விமோசனம் பெறும். தேர்தலில் நாங்கள் நிற்பதா? நிற்கவில்லையா? என்பது கேள்வி இல்லை. எந்த திட்டமும் எங்களு தொகுதிகளுக்கு வந்து சேரவில்லை. அதனால் பதவி விலகும் முடிவு செய்துள்ளேன்.