டி.டி.வி.தினகரனிடத்தில் எந்த ஜனநாயக பண்பும் இல்லை. ஒரு வெள்ளம் போல் வந்தவர்களை அவர் வாரி அணைக்கவில்லை.

சசிகலா, டி.டி.வி.தினகரனை நம்பி பணிகளை ஒப்படைத்து இயங்க முன்வருவாரேயானால் அது ஒரு வீழச்சியை நோக்கி தான் அந்த பயணம் முடியும் என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதுகுறித்து அவர், ‘’அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகள் காவு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கைப்பாவையாக இந்த மாநில அரசு இயங்குவதற்கு கொஞ்சமும் கூச்சப்படவில்லை. சுபாஸ் சந்திரபோஸ் பிறந்த நாளில் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்ற அழைக்கப்பட்ட போது, காவிக் கும்பல் எழுப்பிய கோஷத்தில், நான் உரையாற்ற விரும்பவில்லை என்று பிரதமர் மேடையில் உரயைாற்றுவதை நிராகரித்தார் மம்தா பானர்ஜி. இத்தனைக்கும் அவர் சேலை கட்டிய பெண்மணி. இவர்கள் வேட்டி கட்டிய நிலையிலும் தமிழகத்தை இன்றைக்கு நிர்வாணமாக்கிவிட்டார்கள். மத்திய அரசுக்கு நிர்பந்தம் கொடுக்காத காரணத்தால் தமிழ்நாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை நாளைக்கு வருமா என்பது கேள்வி குறி.

இரட்டை குழல் துப்பாக்கி என்று திராவிட இயக்கத்தின் வரலாற்றில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தையும், அறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தையும் கடந்த காலத்தில் குறிப்பிட்டார்கள். இந்த ஈனப்பிறவிகளை இரட்டை குழல் துப்பாக்கி என்று சொல்வதன் மூலம் இவர்கள் துப்பாக்கியை அவமானப்படுத்துகிறார்கள். துப்பாக்கிக்கே கேவலம். ஒருவர் காட்டி கொடுக்கிறார். ஒருவர் காலில் விழுந்து கிடக்கிறார். காட்டி கொடுப்பவரையும், காலில் விழுபவரையும் இரட்டை குழல் துப்பாக்கி என்று போஸ்டர் ஒட்டி பிழைப்பு நடத்துகிறவர்களின் அறியாமைக்கு நான் அனுதாப்ப்படுகிறேன். 

பெங்களூர் மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்த நாளில் சசிகலா பயணிக்கிற காரில் அதிமுக கொடி கட்டப்பட்டதில் இருந்து, அவர் ஒரு போருக்கு தயாராகிவிட்டார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. டி.டி.வி.தினகரன், அதிமுகவை சசிகலா வழி நடத்துவார் என்று அறிவித்திருக்கிறார்.

அதிமுகவில் மிகப் பெரிய ரசாயண மாற்றம் சசிகலாவின் வருகைக்கு பிறகு நிகழ இருக்கிறது. அதில் தர்மயுத்தம் நடத்தியவரும், நம்பிக்கை துரோகம் செய்தவரும் சசிகலாவால் நிராகரிப்படுவார்கள். இவர்கள் அரசியல் சரித்திரம் ஒரு முடிவுக்கு வரும் என்றே நான் நம்புகிறேன். எனக்கு கிடைத்த அனுபவத்தில் டி.டி.வி.தினகரனிடத்தில் எந்த ஜனநாயக பண்பும் இல்லை. ஒரு வெள்ளம் போல் வந்தவர்களை அவர் வாரி அணைக்கவில்லை. அவர் தலைமையில் இருக்கிற அமைப்பு இன்று ஒரு பெரிய பின்னடைவை சந்தித்திருக்கிறதற்கு காரணம் அவரது நடவடிக்கைகள் தான். சசிகலா இவரை நம்பி பணிகளை ஒப்படைத்து இயங்க முன்வருவாரேயானால் அது ஒரு வீழச்சியை நோக்கி தான் அந்த பயணம் முடியும்’’என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.