பழம் கை நழுவி போகலாம் - எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்த சு.சாமி..!
எடப்பாடி விடுத்திருக்கும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் வராவிட்டால் டிடிவி தினகரனுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும், அவர் தவறினால், ஸ்டாலின் - டிடிவி தினகரன் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.
இதைதொடர்ந்து எடப்பாடி அரசு பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளுநரிடம் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் ஆளுநர் வித்யாசாகர் ராவ், டிடிவி தினகரனின் 19 ஆதரவு எம்எல்ஏக்களும் அதிமுகவிலேயே நீடிப்பதால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக கருத முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னையில் உள்ள தலைமை செயலகத்துக்கு நாளை வர முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 21 எம்எல்ஏக்கள் செயல்பட்டு வரும் நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை சென்னைக்கு அழைத்துள்ளதாகவும், பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் வராவிட்டால் டிடிவி தினகரனுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அனைத்து எம்.எல்.ஏக்களையும் ஒருங்கிணைக்க டிடிவி தினகரன் தயாராக உள்ளார் என்றும் எடப்பாடி பழனிசாமி தவறினால்,ஸ்டாலின் - டிடிவி தினகரன் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.