ஏரிகள் நிரம்பினால் உடனே சொல்றோம்.. வதந்தியை நம்பி பயப்படாதீங்க..! வருவாய்த்துறை ஆணையர் தகவல்..!
சென்னையில் கடந்த 4 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்துவருகிறது. கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக சென்னை புறநகர்ப் பகுதிகளான முடிச்சூர், கோவிலம்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பெருமளவில் தேங்கியுள்ளது.
சென்னை மாநகரின் பிரதான பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கை முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேரிடர் மீட்புப் படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
இதற்கிடையே சென்னையில் ஏரிகள் நிறைந்து உடைப்பு ஏற்படும் என்ற தகவல் பரவியது. சென்னையின் பிரதான ஏரிகள் 20% மட்டுமே நிறைந்துள்ளதாகவும் அதனால் ஏரிகள் உடையும் என்ற வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வருவாய்த்துறை ஆணையர் சத்யகோபால், பூண்டி ஏரியின் கொள்ளளவு 35 அடி. அதில் 25 அடி வரை மட்டுமே நிரம்பியுள்ளது. 17 அடி முழுக்கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி 7 அடி மட்டுமே தற்போது நிரம்பியுள்ளது. ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்தால் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.