ஜெயலலிதா இருந்திருந்தாலும் இதையேதான் செய்திருப்பார்.. - ஓபிஎஸ் அதிரடி பேட்டி…
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் என்ன நிலை எடுத்திருப்பாரோ அதைத்தான் அதிமுகவின் மூன்று அணிகளும் எடுத்துள்ளன என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
வரும் ஜுலை 17 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமார் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாஜக வேட்பாளருக்கு அதிமுகவின் அம்மா அணி ஆதரவு அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் ராம்நாத்துக்கு ஆதரவு அளிப்பதாக ஓபிஎஸ் அறிவித்தார்.
இதையடுத்து தினகரன் அணி சார்பில் ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. மூன்று அணிகளும் பாஜகவை ஆதரவு நிலையை எடுத்துள்ளன.
இது குறித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் என்ன நிலை எடுத்திருப்பாரோ அதைத்தான் அதிமுகவின் மூன்று அணிகளும் எடுத்துள்ளன என கூறினார்.
அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த மனு மீது தேர்தல் ஆணையம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார்.