இப்படியே போனால் கொரோனா மூன்றாவது அலையையும் தடுக்க முடியாது.. எவ்வளவு சொன்னாலும் புரியல. கவலையில் மோடி.
அதே நேரத்தில் மலை வாசஸ்தலங்களில் முகக்கவசமின்றி, விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் கூட்டம் நடந்து கொள்வது கவலைக்குரிய விஷயம். வைரஸ் என்பது சொந்தமாக பரவுவதில்லை, யாராவது சென்று கொண்டு வந்தால் அது வருகிறது.
விரைவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், மலை வாசஸ்தலங்களில் முக கவசமின்றி சுற்றுலா பயணிகள் உலாவருவது கவலை அளிக்கிறது என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முதலலையை காட்டிலும் இரண்டாவது அலை இந்தியாவை மிக்க கொடூரமாக தாக்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை கபளீகரம் செய்துள்ளதுடன், இந்த வைரசால் ஆயிரக்கணக்கில் மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ளனர். பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் இரண்டாவது அலை கட்டுக்குள் வரத் தொடங்கி உள்ள நிலையில், விரைவில் மூன்றாவது அலை உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மூன்றாவது அலையை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பான நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் வைரஸ் தொற்று தீவிரமாக உள்ள வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:- குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் தொற்று விகிதம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அதுமட்டுமின்றி மலைவாசஸ்தலங்களுக்கு படையெடுத்து வரும் சுற்றுலா பயணிகள் முகக் கவசம் இன்று சுற்றுவதை காண முடிகிறது, இரண்டாவது அலையின் போது அதை எதிர்த்து நமது சுகாதார ஊழியர்கள் எந்தளவிற்கு மிகக் கடுமையாக உழைத்துள்ளனர் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ளவேண்டும். வடகிழக்கு மாநிலங்கள் தடுப்பூசி வீணாவதை பெருமளவில் தடுத்துள்ளன. அதே நேரத்தில் சில குறைபாடுகளும் காணப்படுகிறது, வடகிழக்கு மாநிலங்களில் நோய் தடுப்பு நடவடிக்கையில் முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம், இம்மாநிலங்களின் சில மாவட்டங்களில் கொரோனா பாசிடிவ் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து அரசும் மக்களை எச்சரிக்க வேண்டும்.
தொற்றுநோயை தடுக்க மைக்ரோ மட்டத்தில் நாம் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், கொரோனா வைரசின் ஒவ்வொரு மாறுபாட்டையும் நாம் கண்காணிக்க வேண்டும், இது ஒரு வகையான பாலிமார்பிங் அதன் வடிவத்தை மீண்டும் மீண்டும் மாற்றி அது நமக்கு சவால்களை கொடுக்கிறது. ஒவ்வொரு மாறுபாட்டையும் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும், கொரோனா காரணமாக சுற்றுலா வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மலை வாசஸ்தலங்களில் முகக்கவசமின்றி, விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் கூட்டம் நடந்து கொள்வது கவலைக்குரிய விஷயம். வைரஸ் என்பது சொந்தமாக பரவுவதில்லை, யாராவது சென்று கொண்டு வந்தால் அது வருகிறது. அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கொரோனா மூன்றாவது அலையை தடுத்து நிறுத்துவது மிகப்பெரிய சவால். கொரோனா நெறிமுறைகளை பின்பற்றுவதில் நாம் ஒருபோதும் சமரசம் செய்யப்போவதில்லை, இது போல கூட்டம் விதிமுறைகளை மீறி செல்வதன் மூலம் மூன்றாவது அலை மிக வேகமாக வரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே அதைத் தடுக்க ஒவ்வொரு மட்டத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும், கூட்டம் கூடுவதை தடுக்க நாம் முயற்சிக்க வேண்டும், மூன்றாவது அலையை எதிர்த்துப் போராட தடுப்பூசி பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும். தடுப்பூசி தொடர்பான குழப்பங்களை நீக்க சமூக, கலாச்சார, மத, கல்வி சார்ந்த அனைவரையும் நாம் இணைக்க வேண்டும். இதை பிரபலங்கள் மூலம் நாம் விளம்பரப்படுத்த வேண்டும். 3வது அலைக்கு எதிராக மக்களும் அணி திரள வேண்டும் என அவர் பேசியுள்ளார்.