”செங்கோட்டையனின் அவைத்தலைவர் பதவியும் செல்லாது”- அடித்து கூறும் சி.ஆர்.சரஸ்வதி...!!!
தினகரன் நியமனம் செல்லாது என்றால், செங்கோட்டையனின் அவைத்தலைவர் பதவியும், திண்டுக்கல் சீனிவாசனின் பொருளாளர் பதவியும் செல்லாது எனவும், காரணம் அவர்களை சசிகலாதான் நியமனம் செய்தார் எனவும் டிடிவி ஆதரவாளர் சிஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர்.
இதனால் அந்த 19 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி தமிழக அரசின் கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில், ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆனால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது எனவும் சபாநாயகர் அனுப்பிய நோட்டிஸுக்கு பதில் அளிக்க மாட்டோம் எனவும் தினகரன் தரப்பு கூறி வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.பிக்கள்., எம்எல்ஏக்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் 40 எம் எல் ஏக்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.
இந்த கூட்டத்தில் 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதாவது, சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவிலிருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெயா டிவி , நமது எம் ஜி ஆர் இரண்டையும் மீட்டேடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சசிகலா மற்றும் தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் எதுவும் செல்லாது என்றும், சசிகலாவை நீக்குவதற்காக மிக விரைவில் பொதுக்குழு கூட்டவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதி, ஜெயா டிவியும், நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கையும் தனியார் மயமானது எனவும் அவற்றை உரிமையாக்குவோம் என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
தினகரன் நியமனம் செல்லாது என்றால், செங்கோட்டையனின் அவைத்தலைவர் பதவியும், திண்டுக்கல் சீனிவாசனின் பொருளாளர் பதவியும் செல்லாது எனவும், காரணம் அவர்களை சசிகலாதான் நியமனம் செய்தார் எனவும் குறிப்பிட்டார்.