தனியார் ஆலைக்கு 24.6 ஏக்கர் நீர்நிலையை குத்தகைக்கு ஒதுக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.. வச்சு செய்த உயர்நீதிமன்றம்.
தனியார் சிமென்ட் ஆலைக்கு 24.6 ஏக்கர் நீர்நிலையை குத்தகைக்கு ஒதுக்கிய விவகாரம் தொடர்பாக, இரு ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தனியார் சிமென்ட் ஆலைக்கு 24.6 ஏக்கர் நீர்நிலையை குத்தகைக்கு ஒதுக்கிய விவகாரம் தொடர்பாக, இரு ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அரியலூர் மாவட்டத்தில் அரசு நிலத்தில் செயல்பட்டுவந்த தனியார் சிமென்ட் ஆலையை காலி செய்யும்படி மாவட்ட சார் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் தாக்கல் செய்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், சிமெண்ட் ஆலையை அகற்ற நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கு எதிராக அப்பகுதி மக்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது ஆலைக்கு 24.6 ஏக்கர் நீர்நிலையை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து, தமிழக வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து இரு அதிகாரிகளும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி பி.என் பிரகாஷ் மற்றும் வி.சிவஞானம் அமர்வு, நீர்நிலையை தனியார் ஆலைக்கு குத்தகைக்கு வழங்க அரசாணை பிறப்பித்ததன் மூலம், இரு அதிகாரிகளும், இந்தியாவின் ஜமீன்தார்கள் போல, இமய மலையையும், மேற்குத் தொடர்ச்சி மலையையும்கூட குத்தகைக்கு விடலாம் என்ற வகையில் செயல்பட்டு உள்ளதாக கூறி, அவர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவை ரத்து செய்ய மறுத்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்து விசாரிக்க தனி நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.