விமர்சனங்கள் என்னை குத்தி கிழித்தாலும் நீட்டுக்கு ஆதரவாக போராடுவேன் - தமிழிசை ஆவேசம்!
நீட்டுக்கு எதிராக அரசியல் கட்சிகள், மாணவர்களை தவறாக பயன்படுத்தி வருகின்றனர் என்றும், மாணவர்களை போராட்டத்துக்கு தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களை போராடுமாறு அரசியல் கட்சிகள் தூண்டுகின்றன.
நீட் தேர்வுக்கு எதிராக சென்னை, நுங்கம்பாக்கம் பள்ளி மாணவிகளின் போராட்டம் மன்னிக்க முடியாத குற்றம்.
செப்டம்பர் 14 ஆம் தேதி நீட்டுக்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கிராமம் கிராமமாக சென்று நீட்டுக்கு நன்றாக படியுங்கள் என்று கூற உள்ளோம். உங்களைப் போன்ற குழந்தைகளுக்கு நீட் குறித்து எடுத்துச் சொல்லப்போகிறோம்.
குழந்தைகளை, மாணவர்களை போராட்டத்துக்கு தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களை தூண்டுபவர்கள், தங்களின் விளையாட்டை இன்றுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மாணவர்களை தங்கள் அரசியலுக்கு இழுக்காதீர்கள். மாணவர்களை கட்டணம் இல்லாமல் போராட வைத்திருக்கிறார்கள். நீட்டை வைத்து மோசமான அரசியல் நடத்துகிறார்கள்.
எதிர்மறை அரசியலுக்கு எதிராக நேர்மையான ஆரோக்கியமான அரசியலை முன்னிறுத்தி வரும் 14 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
பார்க்க முடியாத, கேட்க முடியாத, உணர முடியாத விமர்சனங்களால் என்னை குத்தி கிழித்தாலும் நான் நீட் தேர்வுக்கு ஆதரவாக போராடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.