I want to get involved in extreme politics again - M.K. Azhagiri
ஒழுங்கு நடவடிக்கை காரணமாக திமுகவில் இருந்து விலக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, திமுக தலைவர் கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் தாம் ஈடுபட விரும்புவதாக கூறியுள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடபட்டதற்காக ஒழுங்கு நடவடிக்கையாக திமுகவில் இருந்து மு.க.அழகிரியை நிரந்தரமாக நீக்குவதாக திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 2014 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, தானும் கட்சியின் பொது செயலாளர் அன்பழகனும் ஆலோசித்து அழகிரியை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கும் முடிவை எடுத்துள்ளதாக கூறியிருந்தார்.

திமுகவில் இருந்து விலக்கப்பட்ட நிலையில் மு.க.அழகிரி மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுகவில் இருந்து தன்னை நீக்கியதற்கு ஏதோ ஒரு காரணத்தை சொல்கிறார்கள் என்றும் இது திமுக தலைவர் கருணாநிதி நிர்பந்தத்தின் காரணமாகவே எடுத்த முடிவாகும் என்று கூறியிருந்தார். மேலும், திமுகவில் இருந்து தாம் நிரந்தரமாக நீக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் மு.க.அழகிரி 2014
ஆம் ஆண்டு கூறியிருந்தார்.
சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து விலகியே இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அவ்வப்போது சென்னை வந்து தனது தந்தை கருணாநிதி மற்றும் தாயாரை சந்தித்து உடல் நலம் விசாரித்து மட்டுமே வந்திருந்தார். கடந்த மாதம் நடைபெற்ற குடும்ப திருமண விழாவில் கலந்து கொண்ட மு.க.அழகிரி, கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். அப்போது, கருணாநிதியிடம் மதுரை வீட்டில் வந்து ஓய்வு எடுக்குமாறு அழகிரி கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் மு.க.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் கருணாநிதி தற்போது நல்ல உடல்நிலையில் உள்ளதாக கூறினார். மேலும், திமுக தலைவர் கருணாநிதி அழைத்தால் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட விரும்புவதாகவும் மு.க.அழகிரி கூறினார்.
